மகாராஷ்டிரா சட்டசபையில் கடும் அமளி: 12 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் அதிரடியாக ஓராண்டுக்கு சஸ்பெண்ட்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) எம்.எல்.ஏக்கள் 12 பேர் ஓராண்டுக்கு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசை நடத்தி வருகிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்து வருகிறார்.

பாஜக கனவு
இந்த 3 கட்சிகளிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் 3 கட்சிகளில் எந்த கட்சி எப்போது வேண்டுமானாலும் ஆட்சியை கவிழ்க்கும் நிலை உள்ளது. இந்த குழப்பத்தை பயன்படுத்தி எப்படியும் ஆட்சி அமைக்கலாம் என்பது பாஜகவின் கனவு.

பாஜக எம்.எல்.ஏக்கள் அமளி
இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவுக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் விமர்சனங்களை முன்வைத்து இன்று அமளியில் ஈடுபட்டனர். இப்படி அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் எச்சரிக்கை விடுத்துப் பார்த்தார்.

ஓராண்டுக்கு 12 பேர் சஸ்பெண்ட்
ஆனால் பாஜக எம்.எல்.ஏக்கள் இடைவிடாமல் அமளியை தொடர்ந்தனர். இதனையடுத்து சட்டசபையில் ஈடுபட்ட 12 பா.ஜ.க. எம்.எல்.ஏக்களை ஓராண்டுக்கு சஸ்பென்ட் செய்வதாக தற்காலிக சபாநாயகர் ஜாதவ் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜகவுக்கு பதிலடி
பிற மாநிலங்களில் பாஜக கையாண்ட இந்த சஸ்பெண்ட் உத்தியை பாஜகவுக்கு எதிரான ஆயுதமாக மகாராஷ்டிரா சட்டசபை பயன்படுத்தி இருக்கிறது. அதுவும் எப்படியும் ஆட்சி அமைக்கலாம் என கனவு கண்ட பாஜகவுக்கு அதிரடியான பதிலடியாகவும் இது பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications