மகாராஷ்டிரா: அமித்ஷா விழாவில் வெயிலால் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு- 123 பேருக்கு சிகிச்சை!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில் கடும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்த 100-க்கும் மேற்பட்டோரில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 24 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா (ஷிண்டே பிரிவு)- பாஜக அரசு சார்பாக மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கும் விழா நவிமும்பை கார்கரில் நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மிகப் பிரம்மாண்டமான திறந்த வெளி மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மகாராஷ்டிராவில் நேற்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி இருந்தது. பல மணிநேரம் இடைவிடாமல் தொடர்ந்து வெயிலில் பொதுமக்கள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் அடுத்தடுத்து பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்தனர்.
வெயிலின் உக்கிரத்தால் சுருண்டு விழுந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அதிகாலையில் அறிவிக்கப்பட்டது. தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 24 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மருத்துவமனைகளில் மொத்தம் 123 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்தவர்கள் குடும்பத்துக்கு மகாராஷ்டிரா அரசு ரூ5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விழாவில் பங்கேற்றவர்கள் 13 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications