பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்.. மகாராஷ்டிர பள்ளியில் அதிர்ச்சி
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளியின் கேண்டீனில் வேலை செய்து வந்த 16 வயது சிறுவன், 7 வயது சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுவனைக் கைது செய்துள்ளனர்.
மேற்குவங்க பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து, உத்தரகாண்ட் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம், உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனைக்குள் வைத்து செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை, கேரளத்தில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்த நோயாளி இருவரை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர் என்று நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இதேபோல, மகாராஷ்டிர மாநிலம், தானே, பத்லாப்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பள்ளியில் படித்து வந்த நான்கு வயது மட்டுமே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பாலியல் துன்புறுத்தலை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
குழந்தைகளின் உடல்நிலை மோசமானதால் இச்சம்பவம் குறித்து விவரம் அறிந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை அறிந்த பொதுமக்கள் பத்லாப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சம்பவம் ஓய்வதற்குள்ளேயே மகாராஷ்டிர மாநிலம், பால்கரில் உள்ள பள்ளியின் கேண்டீனில் பணிபுரியும் 16 வயது சிறுவன், பள்ளி வளாகத்தில் ஏழு வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், பால்கரின் நைகான் பகுதியில் உள்ள தனியார் பள்ளி கேண்டீனில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்நிலையில், அப்பள்ளியில் 2 ம் வகுப்பு படித்து வரும் சிறுமி கடந்த வியாழக்கிழமை கேண்டீனுக்குச் செல்ல மறுத்ததோடு, அங்கு வேலை செய்யும் மாமா தன்னை தொந்தரவு செய்வதாக ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தலைமை ஆசிரியர் நைகான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் கடந்த 15 நாட்களில் மூன்று அல்லது நான்கு முறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் சிறுவனை கைது செய்தனர். மேலும், பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேறு யாரேனும் மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனரா என்ற கோணத்திலும் விசராணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications