விளம்பரத்தை நம்பி ஏமாந்த மக்கள்.. கோடிகளில் புரண்ட நடிகர் ரன்பீர் கபூர்.. அக்.6ல் ஆஜராக ED சம்மன்
மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
வடஇந்தியாவில் மகாதேவ் ஆப் எனும் சூதாட்ட செயலி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியாவில் சூதாட்டம், சூதாட்ட தளங்களுக்கு தடை உள்ளது. ஆயினும் சவுரப் சந்திரசேகர் மற்றும் ரவி உப்பால் ஆகிய இருவரும் பல்வேறு நாடுகளில் சூதாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

வட இந்தியாவிலும் இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளதை அறிந்த அமலாக்கத் துறையும் சத்தீஸ்கர் போலீஸும் இணைந்து மும்பை, கொல்கத்தா, போபால் ஆகிய இடங்களில் ரெய்டு நடத்தினர். அப்போது சட்டவிரோத பணபரிவர்த்தனை மூலம் ரூ 417 கோடி முதலீடு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அதற்கான ஆவணங்களை அமலாக்கத் துறை கைப்பற்றியது. இது தொடர்பாக சவுரப்புக்கும் ரவிக்கும் அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் தற்போது ஐக்கிய அரபு நாடுகளில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இருவரிடமும் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு கடந்த மாதம் சென்ற போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சமூகவலைதளங்களில் அதிக செல்வாக்கு மிக்க ரன்பீர் கபூரை வைத்து சவுரப்பும் ரவியும் பெட்டிங் ஆப்பை பிரபலப்படுத்தினர்.
இந்த செயலியை விளம்பரப்படுத்த ரன்பீர் கபூர் பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இவர் அல்லாமல் டைகர் ஷெரோப், சன்னி லியோன், நேஹா காக்கர், அடிஃப் அஸ்லாம், ரஹாட் பஃதே அலிகான் ஆகியோர் துபையில் நடந்த சவுரப்பின் திருமணத்தில் கலந்து கொண்டதால் அமலாக்கத் துறையினரின் பார்வையில் அவர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் சூதாட்ட செயலிக்கு பணத்தை பெற்றுக் கொண்டு ரன்பீர் கபூர் பிரபலப்படுத்தியதாக சொல்லப்படுவதால் நிறைய பேர் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ரன்பீர் கபூரிடம் விசாரணை நடத்த வரும் அக்டோபர் 6ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications