பாடகர் சித்து மூஸ்லாவை போல் கொடூரமாக கொல்லப்படுவீர்கள்.. நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் கடிதம்
மும்பை: சித்து மூஸ்வாலாவை போல் கொல்லப்படுவீர்கள் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கான் ஆகியோருக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் பகுதியில் நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கான் நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக பூங்காவில் உள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்துள்ளார்.
அங்கு ஒரு கடிதம் இருந்தது. உடனே அதை எடுத்து சலீம் கான் படித்துள்ளார். அப்போது அந்த கடிதத்தில் தனக்கும் தனது மகன் சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல் இருந்தது.

அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த சலீம் கான், கடிதத்தை மகனிடம் கொண்டு போய் காண்பித்துள்ளார். அந்த கடிதத்தில் "சலீம் கான், சல்மான் கான் இருவரும் சித்து மூஸ்வாலாவை போல் கொல்லப்படுவீர்கள் என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து இருவரும் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

இந்திய தண்டனை சட்டம்
இதையடுத்து இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்து மூஸ்வாலா என்பவர் பஞ்சாப் பாடகர். இவர் அரசியல்வாதியுமாவார். இவர் கடந்த வாரம் பஞ்சாபின் மான்சா கிராமத்தில் லாரன்ஸ் பீஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலில் 19 குண்டுகள் இருந்தன. துப்பாக்கிச் சூடு நடத்திய 15 நிமிடங்களில் மூஸ்வாலா இறந்தது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கான் வீட்டிற்கு பாதுகாப்பு
கொலை மிரட்டல் கடிதத்திற்கு பிறகு நடிகர் சல்மான் கான் குடும்பத்தினர் தங்கியுள்ள பாந்த்ராவில் அவர்களது அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி காவல் துறை பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு மான் வேட்டையாடிய வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது சல்மான் கானை அந்த கும்பல் மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

மான் வேட்டை
1998 ஆம் ஆண்டு மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் குற்றம்சாட்டப்பட்டார். இதற்காகவே சல்மான் கானுக்கு லாரன்ஸ் பீஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்திருக்கலாம் என தெரிகிறது. லாரன்ஸ் பீஷ்னோய் தற்போது திகார் சிறையில் இருக்கிறார். அவரிடம சித்து மூஸ்வாலா குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications