கோஹினூர் வைரத்தை விட சல்மான் கான் முக்கியமானவர்.. பிரதமரிடம் நடிகை ராக்கி சாவந்த் கோரிக்கை
மும்பை: கோஹினூர் வைரத்தை விட நடிகர் சல்மான் கான் முக்கியமானவர் என கூறி அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை ராக்கி சாவந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதையடுத்து ராக்கி சாவந்த் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

மும்பை பாந்த்ரா பகுதியில் கேலக்ஸி என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் சல்மான் கான் வசித்து வருகிறார். கடந்த 14 ஆம் தேதி அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடந்தது.
இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில் மும்பை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி ஆதாரங்களுடன் விசாரணையை தொடங்கியிருந்தனர்.
சல்மான்கான் வீட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் கருத்து தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில் இது டிரெய்லர்தான்! அடுத்த முறை நிச்சயம் குறி தவறாறு என கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து சல்மான் கான் வீட்டின் முன்பு துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவரை போலீஸார் அடையாளம் கண்டனர்.
அதை வைத்து குஜராத் மாநிலம் புஜ் நகரில் விக்கி ப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவரை கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது சல்மான் கானின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து சல்மான் கான் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை ராக்கி சாவந்த் கூறுகையில், சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்த போது நான் துபாயில் இருந்தேன். இதை கேள்விப்பட்டு நான் அழுதேன். கோஹினூர் வைரத்தைவிட சல்மான் கான் நம் நாட்டுக்கு முக்கியமானவர்.
அவரைப் பாதுகாக்க வேண்டும். அவர் ஏழைகளுக்கு உதவுபவர். இசட், ஒய், எக்ஸ் பிளஸ் உள்பட அனைத்து விதமான பாதுகாப்பையும் அவருக்கு வழங்க வேண்டும். கங்கனா ரனாவத்துக்கு எந்த காரணமும் இல்லாமல் இவ்வளவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சல்மான் கான் பாலிவுட்டின் ஜாம்பவான். அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
கோஹினூர் வைரம் ராணி எலிசபெத்தின் கிரீடத்தில் உள்ளது. அந்த வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது. இந்த வைரத்தை நாதிர் ஷா என்பவர் கொள்ளையடித்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விக்டோரியா மகாராணியிடம் சென்றது. இதைத் தொடர்ந்து எலிசபெத் தனது மணிமகுடத்தில் சூட்டி கொண்டார். அதை எப்படியாவது வாங்க வேண்டும் என்பதே இந்தியர்களின் விருப்பமாக உள்ளது.












Click it and Unblock the Notifications