மரங்களை வெட்டி சுற்றுச்சூழலை நாசம் செய்யாதீர்... ஆதித்யா தாக்கரே பொளெர்
மும்பை: சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பாக உலகமே விவாதித்து வரும் நிலையில், மும்பையில் மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் நாசம் செய்யப்படுவதாக ஆதித்யா தாக்கரே கவலை தெரிவித்துள்ளார்.
சிவசேனாவின் இளைஞரணி தலைவராக உள்ள ஆதித்யா தாக்கரே மஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் வோர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். சிவசேனாவும், பாஜகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில் பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் ஆதித்யா தாக்கரே ட்வீட் செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ ரயில் திட்ட பணிமனை கட்டப்படுவதற்காக அடர்ந்து வளர்ந்துள்ள ஏராளமான மரங்களை அகற்ற மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து காங்கிரஸில் இருந்து அண்மையில் சிவசேனாவில் இணைந்த ப்ரியங்கா சதுர்வேதி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை மும்பை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை மேற்கொள் காட்டி ஆதித்யா தாக்கரே ட்வீட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடும் இளைஞர்கள் கைது செய்யப்படுவதாகவும், உலகமே சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து பேசி வரும் தருணத்தில், மும்பை ஆரேவில் ஒரே இரவில் மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் நாசம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மராட்டியத்தில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், கூட்டணிக் கட்சியை விமர்சிக்கும் தொணியில் அவர் ட்வீட் செய்திருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications