துணை முதல்வரான மறுநாளே.. பறிமுதல் செய்யப்பட்ட அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகள் விடுவிப்பு!
மும்பை: பினாமி சட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ. 1000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்திருந்த நிலையில், அந்த சொத்துகள் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் மகாராஷ்டிர துணை முதல்வராக அஜித் பவார் கடந்த வியாழக்கிழமை பதவியேற்ற நிலையில், மறுநாளே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் தான் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து பாஜக கூட்டணி கடந்த வியாழக்கிழமை பதவியேற்றது.

சொத்துகள் விடுவிப்பு: பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்ற நிலையில், சிவசேனா தலைவர் ஷிண்டே மற்றும் என்சிபி தலைவர் அஜித் பவார் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர். இதற்கிடையே மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாருக்கு தொடர்புடைய சுமார் ₹ 1,000 கோடி சொத்துகளை வருமான வரித்துறை இப்போது விடுவித்துள்ளது. இந்த சொத்துகள் கடந்த 2021ம் ஆண்டு பினாமி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் இருந்த புகார்களைப் பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்பு தீர்ப்பாயம் சமீபத்தில் தான் தள்ளுபடி செய்து இருந்தது. அதைத் தொடர்ந்தே இப்போது கைப்பற்றப்பட்ட அவரது சொத்துக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை தான் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்ற நிலையில், மறுநாளே அவரது சொத்துகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி என்ன: கடந்த 2021ம் ஆண்டு அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். அவர் பினாமி சொத்துக்களை வைத்திருந்ததாகச் சொல்லி மகாராஷ்டிராவின் சதாரா என்ற பகுதியில் உள்ள அவரது சர்க்கரை ஆலை, டெல்லியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு, கோவாவில் உள்ள ரிசார்ட் உள்ளிட்ட பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இருப்பினும், விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் எதுவும் அஜித் பவார் பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. அந்த சொத்துக்கள் முறையாகவே வாங்கப்பட்டதற்கான ஆதாரங்களை அஜித் பவார் தரப்பு சமர்ப்பித்தது. இதை ஏற்றுக் கொண்ட தீர்ப்பாயம், பினாமி சொத்துக்களுக்கும் அஜித் பவார் குடும்பத்துக்கும் இடையே தொடர்பை நிரூபிக்க வருமான வரித்துறை தவறிவிட்டதாகச் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்தது.
தீர்ப்பு: இது தொடர்பான தீர்ப்பில், "அஜித் பவார் அல்லது அவரது குடும்பத்தினர் பினாமி சொத்துக்களைப் பெறுவதற்காக நிதி பரிமாற்றம் செய்ததாகச் சொல்ல எந்தவொரு ஆதாரமும் இல்லை. அஜித் பவார், சுனேத்ரா பவார் மற்றும் பார்த் பவார் ஆகியோர் பினாமி சொத்துக்களை வாங்கியதற்கான ஆதாரம் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.
அஜித் பவார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் கூறுகையில், "இந்த குற்றச்சாட்டுகளுக்கு சட்டப்பூர்வமாக முகாந்திரம் எதுவும் இல்லை. அவரது குடும்பத்தினர் எந்தவொரு தவறையும் செய்யவில்லை.. இந்த சொத்துக்கள் அனைத்தும் முறையாகவே வாங்கப்பட்டுள்ளன. சட்டப்பூர்வமாக உரிய வங்கி பரிவர்த்தனைகள் மூலமாகவே வாங்கப்பட்டுள்ளன. இதில் முறைகேடுகள் எதுவும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications