மகாராஷ்டிரா: பாஜக எதிரிதானா? சரத்பவாருக்கு செம்ம கேள்வி! 'நாகாலாந்து' மேட்டரை பேசும் அஜித்பவார்!
மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் ஆளும் பாஜக கூட்டணி அரசை ஆதரித்து துணை முதல்வராகி இருக்கிறார் அஜித்பவார். பாஜக கூட்டணி அரசை ஆதரிப்பதை நியாயப்படுத்த நாகாலாந்து விவகாரத்தை சுட்டிக்காட்டுகிறார் அஜித் பவார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக பிளவுபட்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணி உருவானது. இந்த அணி பாஜகவை ஆதரித்தது. இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு அமைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவி வகிக்கின்றனர்.

இந்நிலையில்தான் மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸும் சிவசேனா பாணியிலேயே உடைந்துள்ளது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே போல, தேசியவாத காங்கிரஸில் சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித்பவார், 30 அல்லது 40 எம்.எல்.ஏக்களுடன் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன் மகாராஷ்டிரா துணை முதல்வராகவும் அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் சென்ற 9 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களாகி இருக்கின்றனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த அஜித் பவார், நாகாலாந்து மாநிலத்தில் சரத்பவார் எடுத்த முடிவை சுட்டிக்காட்டினார். நாகாலாந்து மாநிலத்தில் மாநில கட்சியான என்டிபிபி 25 இடங்களில் வென்றது; பாஜக 12 இடங்களில் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் 7 இடத்தில் வெற்றியை அறுவடை செய்தது. என்டிபிபி- பாஜக கூட்டணி அரசும் அமைந்தது. அப்போது என்டிபிபி- பாஜக கூட்டணி அரசுக்கு தேசியவாத காங்கிரஸின் 7 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவர் எனவும் அறிவித்தார் சரத்பவார். அதாவது நாடு முழுவதும் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் சரத்பவார், நாகாலாந்து மாநிலத்தில் மட்டும் பாஜகவுடன் கை கோர்த்து அதிகாரத்தை பகிர்ந்து கொண்டார் எனவும் அப்போது விமர்சனங்கள் எழுந்தன.
இதனைத்தான் அஜித்பவார் தற்போது சுட்டிக்காட்டுகிறார். நாகாலாந்தில் பாஜகவை கட்சித் தலைவரான சரத்பவாரே ஆதரிக்க முடிவு எடுத்தார்; இப்போது மகாராஷ்டிராவில் பாஜகவை ஆதரிக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். இது எப்படி தவறு என்கிறார் அஜித்பவார்.












Click it and Unblock the Notifications