மெஜாரிட்டி இல்லை.. மகாராஷ்டிராவில் பாஜக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஷாக் தந்த கருத்து கணிப்பு
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 128 முதல் 142 இடங்கள்; காங்கிரஸின் மகா விகாஸ் அகாடி கூட்டணி 125 முதல் 140 இடங்களிலும் வெல்லும் என்று அந்த மாநிலத்தின் செய்தி நிறுவனமான Lokshahi வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இருகூட்டணிகளுக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. தொங்கு சட்டசபை தான் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2019ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால் முதல்வரை தேர்வு செய்வதில் மோதல் ஏற்பட்டது. இதனால் பாஜக கூட்டணி உடைந்தது.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து, மகா விகாஸ் அகாடி என்ற புதிய கூட்டணியை உருவாக்கியது. இதையடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற நிலையில், மகா விகாஸ் அகாடி ஆட்சி செய்தது.
அதன்பிறகு இரண்டரை ஆண்டில் இந்த கூட்டணி உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் பாஜக கூட்டணிக்கு தாவினார். உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே தேர்வானார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வர்கள் ஆனார்.
இந்நிலையில் தான் இன்று ஒரே கட்டமாக மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் என்பது நடந்து முடிந்துள்ளது. வரும் நவம்பர் 23ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளது. இங்கு மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க 145 இடங்களில் வெல்ல வேண்டும். இந்நிலையில் தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள Lokshahi எனும் செய்தி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கருத்து கணிப்பில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 128 முதல் 142 இடங்கள் வரை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸின் மகா விகாஸ் அகாடி 125 முதல் 140 இடங்கள்; இதர கட்சிகள் 18 முதல் 23 இடங்களிலும் வெல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூட்டணி வாரியாக பார்த்தால் பாஜக 80 முதல் 85 இடங்களிலும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 30 முதல் 35 இடங்களிலும், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 18 முதல் 22 இடங்களிலும் வெல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் 48 முதல் 55 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே சிவசேனா 39 முதல் 43 இடங்களிலும், சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 38 முதல் 42 இடங்களிலும் வெல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் தற்போதைய இந்த கருத்து கணிப்பின்படி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் யாருக்கும் ஆட்சியை பிடிப்பதற்கான 145 தொகுதிகள் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிராவில் தொங்கு சட்டசபை தான் உருவாகும். சிறிய கட்சியினர், சுயேச்சைகள் கிங் மேக்கராக மாறுவார்கள் என்று இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications