மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு- சரத்பவாருடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் திடீர் சந்திப்பு
மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் புதிய பரபரப்பாக தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி) தலைவர் சரத்பவாரை பாஜகவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசியிருக்கிறார்.
மகாராஷ்டிராவில் 2019-ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித் பவார் மூலம் உடைத்து ஆட்சி அமைத்தார் தேவேந்த்ர பட்னாவிஸ். ஆனால் பட்னாவிஸ் அரசு 78 மணிநேரம்தான் தாக்கு பிடித்தது.

சரத்பவாரின் வியூகம்
பின்னர் சரத்பவாரின் அதிரடி வியூகங்களில் சிவசேனா- என்.சி.பி.- காங்கிரஸ் இணைந்து புதிய கூட்டணி அரசு அமைந்தது. கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு முரண்பாடுகள் கூட்டணிக்குள் உருவாவதும் அதற்கு தீர்வு காண்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அமித்ஷா- பவார் சந்திப்பு
அதேபோல் சரத்பவார்- பாஜக இடையேயான உறவும் மாநில அரசியலில் பலத்த சந்தேகங்களை எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறது. அண்மையில் குஜராத்துக்கு போய் அமித்ஷாவை சரத்பவார் ரகசியமாக சந்தித்தார் என கூறப்பட்டது. இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பல விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது என்றார் அமித்ஷா.

ஜனாதிபதி தேர்தலில் சரத்பவார்?
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சரத்பவாரை பாஜக முன்னிறுத்தலாம் என்கிற செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த பின்னணியில் சரத்பவாரை தேவேந்திர பட்னாவிஸ் இன்று திடீரென சந்தித்து பேசியிருக்கிறர்.

பவார்-பட்னாவிஸ் சந்திப்பு
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும்தான் என்கின்றனர் என்.சி.பி., பாஜக தலைவர்கள். ஆனால் சிவசேனா- என்.சி.பி. இடையேயான உறவில் ஏற்பட்டு விரிசலின் அடுத்த படிநிலைதான் பாஜகவுடனான சரத்பவாரின் இணக்கமான போக்கு என சுட்டிக்காட்டுகின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications