பாஜகவின் கவனம் கொரோனாவை தடுப்பதில் இல்லை.. உ.பி. தேர்தலில்தான் உள்ளது.. ஆதாரத்துடன் தாக்கும் சிவசேனா
மும்பை: நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக பாஜக தனது பிம்பத்தை உயர்த்தி, அடுத்தாண்டு நடைபெறும் உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தே சிந்தித்து வருவதாக சிவசேனா சாடியுள்ளது.
கொரோனா பரவலின் 2ஆம் அலையில் நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.08 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 4,157 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா 2ஆம் அலையைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

சிவேசானா தாக்கு
இந்நிலையில், சிவேசானாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சம்னா பாஜகவை நேரடியாக விமர்சித்துக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தத் தொடர்ந்து, பாஜக தலைமை தற்போது உத்தரப் பிரதேச தேர்தலில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. மிஷன் உத்தரப் பிரதேசம் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் முக்கியமா?
இதைப் பார்த்தால் நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதைப் போலவே தெரிகிறது. தற்போது இருக்கும் நிலையில் தேர்தலை நடத்துவது, தேர்தல்களில் வெற்றிபெறப் பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும் நடத்துவது மட்டுமே பாக்கி என்பது போலத் தெரிகிறது. ஜனநாயக நடைமுறைகளில் தேர்தல்கள் மிக முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நாம் தேர்தலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமா?

2024 தேர்தலில் எதிரொலிக்கும்
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் பாஜகவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இதனால், அவர்கள் தங்கள் பிம்பத்தை உயர்த்தி, அடுத்தாண்டு நடைபெறும் உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறும் முயற்சிகளில் ஈடுபட்ட தொடங்கிவிட்டனர். ஆனால், அங்கு கொரோனா பரவல் மிக மோசமாக உள்ளது. அது அடுத்தாண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலிலும் சரி, 2024 மக்களவை தேர்தலிலும் சரி, பாஜகவுக்கு பெரும் சிக்கலைக் கொடுக்கும்.

கொரோனா பாதிப்பு
கொரோனா பரவல் காரணமாக அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இருப்பினும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டதால், அங்கு மட்டுமில்லை, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு உச்சத்திற்குச் சென்றுவிட்டது.

கங்கை நதி
கொரோனா வைரஸ் ஒரு தேசிய பேரிடர். இது உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலங்களில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. உ.பி.யில் கங்கையில் மிதந்து வந்த உடல்கள், அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்தன. எனவே, தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அனைவரும் முழு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், கங்கை நதி இந்துக்களின் சடலங்களைக் கொண்டு செல்லும் நதியாக மாறிவிடும். இது நம் நாட்டிற்கு நல்லதல்ல" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பாஜக ஆலோசனை
கடந்த சில நாட்களுக்கு முன், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு அடுத்தாண்டு நடைபெறும் உபி சட்டசபைத் தேர்தலில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். இதில் கொரோனாவால் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயரைத் தேர்தலுக்கு முன்னரே எப்படி போக்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதில் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications