இன்று நள்ளிரவு வரைதான் கெடு.. யாரும் ஆட்சி அமைக்காவிட்டால் மகாராஷ்டிராவில் அடுத்து என்ன தெரியுமா?
Recommended Video
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அமைப்பதில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கூட்டணி கட்சிகள் நடுவே நிலவிவரும் இழுபறி நிலை காரணமாக அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகின. 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் குறைந்தபட்சம் 145 எம்எல்ஏக்களையாவது பெற்றுள்ள கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும்.

பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில், ஆட்சியில் சமபங்கு வேண்டும் என்று சிவசேனா திடீரென போர்க்கொடி உயர்த்தியது. இதற்கு பாஜக சம்மதிக்கவில்லை. இந்த இழுபறி நிலை இன்னமும் நீடித்து வருவதால் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாஜக உடைந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சிய சிவசேனா, தங்கள் எம்எல்ஏக்கள் பலரையும் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளது.
இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் 44 எம்எல்ஏக்களும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா சட்டசபையின் பதவி காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது.
அதற்கு முன்பாக ஆட்சி அமைத்தால் தான் உண்டு. அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் சட்டத்தில் உள்ள அம்சமாகும்.
இந்த நிலையில் தான் கடைசி கட்ட முயற்சியாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் கூட்டணி அரசு அமைவது உறுதி, அல்லது சட்டசபை கலைந்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டி வரும் என்பது கள எதார்த்தமாக உள்ளது.
முன்னதாக, சிவசேனா உடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியாது என்று சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, அதிரடியாக அறிவித்து விட்டது. எனவே இப்போது எஞ்சியிருப்பது பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அரசு அமைய வேண்டியது, அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற இரண்டில் ஒன்று மட்டுமே. நள்ளிரவு வரைதான் கெடு, என்பதால் மகாராஷ்டிர அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications