ஒரே சிம்மில் 60 வங்கி கணக்கு இணைப்பு.. அதிர வைத்த பேங்க் ஆஃப் பரோடா முறைகேடு.. 60 பேர் சஸ்பெண்ட்
மும்பை: பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 'பாப் வோர்ல்ட்' மொபைல் செயலியில் வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டதில் நிறைய முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரில், உதவி பொதுமேலாளர் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் உள்பட சுமார் 60 பேரை வங்கி நிர்வாகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.
நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களின் வசதிக்காக 'பாப் வேர்ல்டு' என்ற செல்போன் ஆப்பை அறிமுகப்படுத்தியது. இந்த மொபைல் ஆப்பில் நிறைய வாடிக்கையாளர்களை இணைக்க வேண்டும் என வங்கி தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி ஊழியர்கள், ஏஜெண்டுகள், நிறைய வாடிக்கையாளர்களிடம் மொபைல் செயலியில் இணைவதற்கான ஒப்புதல் படிவங்களை கொடுத்து மொபைல் எண்களை இணைத்திருக்கிறார்கள்.

இதனிடையே 'பாப் வேர்ல்டு' ஆப்பில் ஆன்போர்டிங் செயல்பாட்டில் ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ளதாகவும் அந்த மொபைல் ஆப்பில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க வேண்டாம் என்று பேங்க் ஆஃப் பரோடாவுக்கு அக்டோபர் 10ம் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949ன் பிரிவு 35ஏ வின் கீழ் தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
சில பேங்க் ஆஃப் பரோடா ஊழியர்கள் குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்காக மொபைல் வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அந்நியர்களின் மொபைல் எண்களைப் பயன்படுத்தியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த உத்தரவினை பிறப்பித்து இருந்தது.
மேலும் மொபைல் ஆப் வாடிக்கையாளர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இதனிடையே பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 'பாப் வோர்ல்ட்' மொபைல் செயலியில் வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டதில் நிறைய முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், வாடிக்கையாளர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் திருடப்பட்டு பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும் அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பேங்க் ஆஃப் பரோடா வங்கி உடனடியாக அனைத்து துறையிலும் தணிக்கை செய்தது. அப்போதுதான் சில ஏஜெண்டுகள், வாடிக்கையாளர்களை ஏமாற்றி தவறான மொபைல் எண்களையும் இணைத்துள்ளதும், இதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமார் 22 லட்சம் ரூபாய் திருட்டு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 362 வாடிக்கையாளர்களிடம் இதுபோல, தவறான மொபைல் எண்கள் இணைக்கப்பட்டதும். அதில் ஆறு பேர் தலா 1.10 லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்ததும் தணிக்கையில் உறுதியானது.
பொதுவாக பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஒரு மொபைல் எண்ணுடன் அதிகபட்சம் எட்டு வங்கிக் கணக்குகளை மட்டுமே இணைக்க அனுமதிக்கும். ஆனால் ஒரே மொபைல் எண்ணுடன் சுமார் 10 முதல் 60 வங்கிக் கணக்குகள் வரை இணைக்கப்பட்டுள்ளன. இந்த மொபைல் எண்கள் அனைத்தும் ஏஜெண்டுகளுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தணிக்கையில் மேலும் பல விவரங்கள் வெளியாகும், பூதாகரமாகும் என்று கூறப்படுகிறது.
இந்த முறைகேடு புகாரில் தொடர்புடைய 60 ஊழியர்களை பேங்க் ஆஃப் பரோடா வங்கியானது பணி இடைநீக்கம் செய்துள்ளது. அதில் 11 பேர் துணை பொது மேலாளர் (AGM) பதவி வகிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணை தீவிரமாக நடப்பதால் எந்த அளவிற்கு முறைகேடு நடந்தது. யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்பது விரைவில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications