பாலிவுட் நடிகர் சல்மான் கானை தொடர்ந்து.. கத்ரீனா கைஃபுக்கும் கணவர் விக்கி கவுசலுக்கும் கொலை மிரட்டல்
மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் அவரது கணவரும் நடிகருமான விக்கி கவுசலுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் அவரது கணவர் விக்கி கவுசலுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளதாக தெரிகிறது. அந்த நபர் இன்ஸ்டா பக்கத்தில் கத்ரீனாவை பின்தொடர்கிறார்.
அவர் போலியான ஐடியில் பின்தொடர்வதாக தெரிகிறது. இந்த நிலையில் கொலை மிரட்டல் குறித்து கத்ரீனாவும் விக்கியும் மும்பை சான்டாகுரூஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

போலீஸார்
இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம நபர் அனுப்பிய இன்ஸ்டா போஸ்ட்டில் என்ன வார்த்தைகளை கொண்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவில்லை. கத்ரீனா தனது பிறந்தநாளை கொண்டாட கணவர் விக்கியுடன் மாலத்தீவுகளுக்கு சென்றிருந்தார்.

புகைப்படங்கள்
அங்கிருந்து அவர் ஏராளமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கான் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதாவது சல்மானின் தந்தை சலீம் கான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

நடைப்பயிற்சி
அப்போது அவர் பயிற்சிகளை முடித்துக் கொண்டு சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்து ஓய்வு எடுத்தார். அப்போது அந்த இடத்திலிருந்து எழுந்து வீட்டுக்குச் செல்ல முயன்றார். அவரது பக்கத்தில் ஒரு கடிதம் இருந்தது. இதையடுத்து அந்த கடிதத்தை படித்து பார்த்த போது அதில் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் எப்படி கொல்லப்பட்டாரோ அது போல் "நீங்கள் இருவரும் (சல்மானும் சலீமும்) படுகொலை செய்யப்படுவீர்கள் என கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

சல்மானுக்கு பாதுகாப்பு
இதையடுத்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதுகுறித்து புலனாய்வு அதிகாரிகள் சிலர் கூறுகையில் பாலிவுட் நடிகர் , நடிகைகளிடம் பணம் பறிக்கும் நோக்கி சில கும்பல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குறிப்பிட்டனர். மேலும் சல்மான் கான் ஆயுதம் வைத்துக் கொள்வதற்காக அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார்.

நடிகை ஸ்வரா பாஸ்கர்
அது போல் பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்திருந்தது. இதுகுறித்து ஸ்வரா அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அந்த கடிதம் இந்தியில் எழுதப்பட்டிருந்தது. ஸ்வரா குறித்து மோசமான வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வீர் சாவர்கரை அவமானப்படுத்தினால் இந்த நாட்டின் இளைஞர்களால் பொருத்துக் கொள்ள முடியாது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இப்படிக்கு என்ற இடத்தில் இந்த நாட்டின் இளைஞர்கள் என இந்தியில் கையெழுத்திடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications