Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை! மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரை விடுவித்து மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 2006ல் நடந்த இந்த ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 189 பேர் உயிரிழந்ததுடன், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரசுத் தரப்பு குற்றத்தை நிரூபிக்கத் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறி மும்பை ஐகோர்ட், குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்துள்ளது.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 2006ல் ஒரு மிக மோசமான ரயில் குண்டுவெடிப்பு நடந்தது. நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் 190+ பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றம் 12 பேரைக் குற்றவாளிகள் என அறிவித்திருந்தது.

Bombay High Court Mumbai blast

மும்பை குண்டுவெடிப்பு

அதாவது 2015ஆம் ஆண்டில், இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரையும் குற்றவாளி என அறிவித்தது. அதில் ஐந்து பேருக்கு மரண தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

12 பேரும் விடுதலை

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி அனில் கிலோர் மற்றும் நீதிபதி ஷியாம் சந்தக் அமர்வு விசாரித்து வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் மேலும் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றத்தை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் குற்றத்தைச் செய்தார்கள் என்பதை நம்பும்படி இல்லை.. எனவே, அவர்கள் மீதான தண்டனை ரத்து செய்யப்படுகிறது. வேறு வழக்குகளில் தொடர்பில்லை என்றால் அவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்" என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறியதால், சந்தேகத்தின் பலனாகக் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், சாட்சிகளின் வாக்குமூலங்களையும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. குண்டுவெடிப்பு நடந்து 100 நாட்களுக்குப் பிறகு, ஒருவரால் சந்தேக நபரை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

அரசு தரப்பு நிரூபிக்கவில்லை

மேலும், விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வரைபடங்கள் குண்டுவெடிப்புகளுடன் தொடர்பில்லாதவை போல் தோன்றுவதாகவும் மும்பை உயர் நீதிமன்றம் கூறியது. குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் என்ன மாதிரியானவை என்பதையும் அரசு தரப்பு நிரூபிக்க முடியவில்லை என்பதையும் மும்பை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது

என்ன நடந்தது!

2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி, மும்பை புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து ஏழு குண்டுகள் வெடித்தன. இந்தக் குண்டுகள் அனைத்தும் 11 நிமிடங்களுக்குள் வெடித்தன. சேதத்தை அதிகரிக்க நோக்கில் பிரஷர் குக்கர்களில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டு குண்டுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. அன்றைய தினம் அலுவலகத்தில் இருந்து மக்கள் வீடு திரும்பும்போது சரியாக மாலை 6.24 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. மாலை 6.35 மணிக்குள் அடுத்தடுத்து ஏழு குண்டுகள் வெடித்தன.

யார் அந்த 12 பேர்?

இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம், பைசல் ஷேக், ஆசிப் கான், கமல் அன்சாரி, எஹ்தேஷாம் மற்றும் நவீத் கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. முகமது சஜித் அன்சாரி, முகமது அலி, டாக்டர் தன்வீர் அன்சாரி, மஜித் ஷாஃபி, முஸம்மில் ஷேக், சோஹைல் ஷேக் மற்றும் ஜமீர் ஷேக் ஆகிய ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமன்றி நிரூபிக்கப்படாததால் உயர் நீதிமன்றம் இந்த 12 பேரையும் விடுவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+