வெளிநாட்டு குற்றவாளிக்கு இந்தியில் ஆவணம்.. நீதிபதிகள் கோபம்.. விடுதலை செய்ய அதிரடி உத்தரவு
மும்பை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டை சேர்ந்த குற்றவாளிக்கு தடுப்புக் காவல் தொடர்பான விவரங்களை இந்தி மொழியில் வழங்கியதால் ஆத்திரமடைந்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவரை உடனடியாக சிறையில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் எந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தாலும், அதுதொடர்பான விசாரணை அறிக்கைகள், அவர் காவலில் வைக்கப்படுவதற்கான காரணங்கள் அடங்கிய ஆவணம் ஆகியவற்றை அவருக்கு புரிகின்ற மொழியில்தான் கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை.
ஒருவேளை, அவருக்கு எழுத படிக்க தெரியாவிட்டாலும் கூட அவருக்கு புரிகின்ற மொழியில் மட்டுமே ஆவணங்களை தயார் செய்து கொடுக்க வேண்டும். அதை அவரது வழக்கறிஞர் அவருக்கு எடுத்துக்கூறுவார். இதுதான் நீதிமன்றங்களில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறை. அப்படி இருக்கையில், வெளிநாட்டைச் சேர்ந்த குற்றவாளிக்கு இந்தியாவில் உள்ள ஒரு மொழியான இந்தியில் ஆவணங்கள் வழங்கப்பட்டது நீதிபதிகளை அதிருப்தி அடையச் செய்திருக்கிறது. இதுகுறித்த விவரங்கள் வருமாறு:
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பிக்கு சிக்கல்.. சபாநாயகருக்கு வனத்துறை கடிதம்- விரைவில் வழக்குப்பதிவு?
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நபர்
தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்தவர் அகிசிலாஸ் டிமெட்ரியாட்ஸ் (31). இவரை போதைப்பொருட்களுடன் கடந்த 2020-ம் ஆண்டு மும்பை என்சிபி (போதைப்பொருள் தடுப்பு பிரிவு) அதிகாரிகள் கைது செய்தனர். சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் மற்றும் மனநோய் மருந்துகளை கடத்துதல் சட்டப்பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. என்சிபி காவலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு, ஒரு மாதம் கழித்து ஜாமீன் வழங்கப்பட்டது. மும்பையை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்தி மொழியில் ஆவணங்கள்..
இந்த சூழலில், அவரை தடுப்புக் காவலில் (Detention) வைப்பதற்கான என்சிபியின் ஆவணங்கள் அகிசிலாஸ் டிமெட்ரியாட்ஸுக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டது. அதாவது, எந்தெந்த விதிமுறைகளின் அடிப்படையில் அவருக்கு தடுப்புக் காவல் விதிக்கப்படுகிறது என்பது தொடர்பான விவரம் அந்த ஆவணங்களில் இருக்கும். இந்த ஆவணங்கள், குற்றவாளி படித்து புரிந்துகொள்ளக் கூடிய மொழியில்தான் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த குற்றவாளிக்கு இந்த தடுப்புக் காவல் தொடர்பான ஆவணங்கள் முழுக்க முழுக்க இந்தி மொழியில் வழங்கப்பட்டன. மேலும், ஜாமீன் காலம் நிறைவடைந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் அவரை என்சிபி மீண்டும் கைது செய்தது.
இந்தி புரியவில்லை - குற்றம்சாட்டப்பட்டவர் மனு
இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் இந்தியில் இருப்பதால், தன்னால் படித்து புரிந்துகொள்ள முடியவில்லை எனக் கூறி அகிசிலாஸ் டிமெட்ரியாட்ஸ் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது நீதிபதிகள் ரேவதி மோஹிதே, ப்ரித்விராஜ் சவாண் முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்சிபி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "குற்றம்சாட்டப்பட்டவருக்கு இந்தி புரியாமல் இருக்கலாம்; ஆனால், அவரது வழக்கறிஞர் அந்த ஆவணங்களை குற்றம்சாட்டப்பட்டவருக்கு புரிகிற மொழியில் மொழிப்பெயர்த்து கொடுத்துள்ளார்" என வாதிட்டார்.
"உடனடியாக விடுதலை செய்க'
ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு நபருக்கு அதற்கான காரணங்களை அவருக்கு புரிகிற மொழியில்தான் வழங்கி இருக்க வேண்டும். அதை செய்யாமல் இருப்பது என்பது, சம்பந்தப்பட்ட நபருக்கு தடுப்புக் காவல் விதிக்கப்பட்டதற்கான காரணங்களை கூறாமல் இருப்பதற்கு சமம். இது, தடுப்புக்காவல் சட்ட விதிகளை மீறுவதாகும். எனவே, உரிய மொழிபெயர்ப்பு ஆவணங்களை பெறாத காரணத்தால், சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.