தமிழ்நாட்டை உருவாக்கியது ஆங்கிலேயர்கள்- தமிழகத்தில் தீவிரவாத சக்திகள்..மகா.ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்
மும்பை: தமிழ்நாட்டை தமிழர்கள் உருவாக்கவில்லை; தமிழ்நாட்டை ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினர்; நமது நாட்டில் இன்னும் சில மாநிலங்களில் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிபி ராதாகிருஷ்ணன் பேசியதாவது: இந்தியா எப்போதும் ஒரே நாடாக இருந்தது இல்லை. அசோக சக்கரவர்த்திதான் இந்திய துணை கண்டத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒருங்கிணைத்தார். ஆனால் கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றில் இந்தியா ஒரு தேசம்தான்.

அன்னிய படையெடுப்பாளர்கள்தான் இந்தியாவை பிரித்து ஆட்சி செய்தனர். ஆகையால்தான் ஒற்றுமை என்பது இன்றைக்கும் மிகவும் அவசியமானதாக இருக்கிறது.
தமிழ்நாடு என்பது எந்த தமிழனாலும் உருவாக்கப்படவில்லை; தமிழ்நாட்டை கூட ஆங்கிலேயர்களே உருவாக்கினர். சமண மதத்தை 3-ல் 2 பங்கு தமிழர்கள் பின்பற்றினர்; ஆனால் தமிழ்நாட்டில் 40,000 பேர்தான் இன்று சமணர்களாக இருக்கின்றனர். தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலங்களில் இப்போதும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாகவே செயல்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனர் ஹெட்கேவரின் சிந்தனைகள் முன் எப்போதையும்விட தற்போதைய காலத்துக்கு மிகவும் பொருத்தமானவை. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பல நூற்றுக்கணக்கான தேசபக்தர்களை உருவாக்கியது. ஆர்.எஸ்.எஸ். தேசபக்தர்கள் இந்த தேசத்துக்காக தன்னலம் பார்க்காமல் வாழ்ந்து மறைந்தனர். இவ்வாறு சிபி ராதாகிருஷ்ணன் பேசினார்.

மேலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தாம் இணைந்து பணியாற்றியதையும் நினைவுகூர்ந்து பேசினார் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications