கடைசி நிமிடத்தில் ட்விஸ்ட்.. வேட்புமனுவை வாபஸ் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்.. மகாராஷ்டிராவில் குழப்பம்
மும்பை: மகாராஷ்டிராவில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே யாருமே எதிர்பார்க்காத வகையில் நேற்று வேட்பு மனுவை வாபஸ் பெற ஒரு சில நிமிடங்களே இருந்த நிலையில், கோலாப்பூர் வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த மதுரிமா ராஜே சத்ரபதி தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் அக். 21ம் தேதி ஒரு கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் இப்போது ஷிண்டே சிவசானா- பாஜக- அஜித் பவார் என்சிபி கூட்டணி ஆட்சியில் உள்ளது.

அங்கு அவர்களுக்கு எதிராகக் காங்கிரஸ்- தாக்ரே சிவசேனா- சரத் பவார் என்சிபி கூட்டணி களமிறங்குகிறது. தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தல்: மகாராஷ்டிரா தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் நடந்துள்ளது. அங்கு வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற நேற்று திங்கள்கிழமை தான் கடைசி நாளாகும். அதற்கான காலக்கெடு முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், கோலாப்பூர் வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த மதுரிமா ராஜே சத்ரபதி தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
இந்த தொகுதியில் முதலில் காங்கிரஸ் சார்பில் கேஎம்சி கார்ப்பரேட்டர் ராஜேஷ் லட்கர் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள் காங்கிரஸ் வேட்பாளரை மாற்றியது. அதாவது ராஜேஷுக்கு பதிலாக கோலாப்பூரின் அரச குடும்பத்தைச் சேர்ந்த மதுரிமா ராஜே சத்ரபதி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
சுயேச்சையாகப் போட்டி: இதனால் அதிருப்தியடைந்த ராஜேஷ் லட்கர், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். மேலும், வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். ஆனால், அவரை சமாதானம் செய்து வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று திங்கள்கிழமை எம்எல்சி சதேஜ் பாட்டீல் லட்கரை சமாதானப்படுத்த அவரது வீட்டிற்கே சென்றார். இருப்பினும், ராஜேஷ் லட்கர் அங்கு இல்லை. அவரது மொபைலும் ரீச் ஆகவில்லை. காங்கிரஸ் கட்சியினர் லட்கரை தேடிய போதிலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தச் சூழலில் வேட்புமனுவை வாபஸ் பெற 5 முதல் 10 நிமிடங்களே இருந்த நிலையில், கோலாப்பூர் அரச குடும்ப உறுப்பினர்கள், எம்பி ஷாகு சத்ரபதி, முன்னாள் எம்எல்ஏ மலோஜிராஜே சத்ரபதி, அவரது மனைவியும் காங்கிரஸ் வேட்பாளருமான மதுரிமா ராஜே சத்ரபதி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். கடைசி நிமிடத்தில் அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
போட்டியிட விரும்பவில்லை: இது தொடர்பாக எம்பி ஷாஹு சத்ரபதி பேசுகையில், "வேறு வழியில்லாமல் தான் மதுரிமா தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். ராஜேஷ் லட்கர் ஒரு நல்ல கட்சி தொண்டர். அவர் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. இதனால் அவருக்கு எதிராகப் போட்டியிட விரும்பவில்லை. இதன் காரணமாகவே வாபஸ் பெற்றோம்" என்றார்.
மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் வடக்கு சட்டசபை தொகுதியில் பாஜக கூட்டணியில் ஷிண்டே சிவசேனா சார்பில் ராஜேஷ் க்ஷிர்சாகர் போட்டியிடும் நிலையில், அவருக்கும் தற்போது சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ராஜேஷ் லட்கருக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications