இன்னும் 1 மாதம்தான்.. கொரோனாவிற்கு இடையே முதல்வர் பதவிக்கு சிக்கல்.. மோடிக்கு போன் போட்ட உத்தவ்!
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பதவி பிரச்சனை இருப்பதால் தற்போது அவர் பிரதமர் மோடியிடம் போன் செய்து இந்த பிரச்சனையில் தலையிடும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவிக்கு பிரச்சனை இருப்பதால் தற்போது அவர் பிரதமர் மோடியிடம் போன் செய்து இந்த பிரச்சனையில் தலையிடும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மிக மோசமான மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 9,915 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மும்பையில் மட்டும் 6644 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இன்னொரு பக்கம் அரசியல் ரீதியான பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. அங்கு சிவசேனாவின் கூட்டணியில் முதல்வராக இருக்கும் உத்தவ் தாக்கரேவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்சி முடிகிறது
பெரும் அரசியல் திருப்பங்களுக்கு இடையே கடந்த வருடம் நவம்பர் 28ம் தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் இவர் பதவி ஏற்கும் போது எம்எல்ஏவாக இல்லை. இதனால் இவர் 6 மாதங்களுக்குள் எம்எல்ஏ தேர்தலை சந்தித்து அதில் வெற்றிபெற வேண்டும். இதற்கான அவகாசம் வரும் மே 28ம் தேதியோடு முடிகிறது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே இவர் எம்எல்ஏ ஆக அவகாசம் உள்ளது.

ஆனால் சிக்கல்
ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக மகாராஷ்டிராவில் இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு மாதத்திற்கு பின் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை இழக்க வாய்ப்புள்ளது. இது அங்கு பெரிய அரசியல் பிரச்சனையாக வெடிக்க வாய்ப்புள்ளது. இதை பாஜக சரியாக பயன்படுத்த போகிறது என்றும் கூறுகிறார்கள். இந்த நிலையில் அங்கு சிவசேனா தலைமையிலான மஹா விகாஸ் அகாடி தலைவர்கள் அம்மாநில ஆளுநரை சந்தித்தனர்.

ஆளுநர் உடன் சந்திப்பு
அம்மாநில ஆளுநர் பி எஸ் கோஷ்யாரி உடன் சந்திப்பு நடத்தினார்கள். அதில், உத்தவ் தாக்கரேதான் முதல்வராக தொடர வேண்டும் என்று மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். கவர்னர் தனது அதிகாரத்தின் மூலம் உத்தவ் தாக்கரேவை தேர்தல் நடக்கும் வரை முதல்வராக தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதில் ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அம்மாநில கவர்னர் அறிவித்துள்ளார்.

போன் செய்தார்
இந்த நிலையில்தான் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியிடம் போன் செய்து இந்த பிரச்சனையில் தலையிடும்படி கோரிக்கை வைத்துள்ளார். என்னுடைய அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, ஒரு அரசியல் நிலையற்றதன்மையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். இது தவறான விஷயம். கொரோனா பரவும் இந்த நேரத்தில் இப்படி செய்வது சரியாக இருக்காது. அதனால் பிரதமர் மோடி இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications