சடலங்கள் சுற்றி கிடக்க.. பக்கத்திலேயே கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை.. மும்பையில் ஷாக்- வீடியோ
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகராட்சி மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு, சடலங்களுக்கு இடையே வைத்து சிகிச்சையளிக்கப்படுவது போன்ற வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சியோன் எனப்படும் அந்த மருத்துவமனையில் இப்படி சிகிச்சை நடப்பதாக செல்போனில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில் சுமார் 7 சடலங்கள் படுக்கையில் வைக்கப்பட்டுப்பதை போல தெரிகிறது. அவற்றிற்கு அருகருகே கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் காட்சிகளும் உள்ளன. நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அருகில் நின்று, பீதியோடு இந்த நிலைமையை பார்க்கிறார்கள்.
பாஜக எம்எல்ஏ நிதிஷ் ரானே, டுவிட்டர் பக்கத்தில், இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். 'சியோன் மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சடலங்களுக்கு அருகே தூங்குகிறார்கள். இது மிகமிக மோசமான விஷயம். என்ன மாதிரியான நிர்வாகம் அங்கு இருக்கிறது என்பது புரியவில்லை. இதை மிகப்பெரும் அவமானமாக பார்க்கிறேன்', இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ பார்ப்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ள நிலையில், சியோன் மருத்துவமனையின் டீன் பிரமோத் இங்கேல் இதுகுறித்து கூறுகையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதற்கு அவர்களது உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவேதான், சடலங்கள் அங்கேயே கிடந்தன. தற்போது அவற்றை அகற்றி விட்டோம். இதுசம்பந்தமாக விசாரணை நடக்கிறது என்று அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஒப்புக் கொண்டார்.
In Sion hospital..patients r sleeping next to dead bodies!!!
— nitesh rane (@NiteshNRane) May 6, 2020
This is the extreme..what kind of administration is this!
Very very shameful!! @mybmc pic.twitter.com/NZmuiUMfSW
பிணவறையில் 15 பெட்டிகள் இருந்ததாகவும், அதில், 11 பெட்டிகள் நிரம்பியிருந்ததால், இந்த சடலங்களை அங்கே கொண்டு செல்ல முடியவில்லை என்று ஒரு விளக்கத்தை டீன் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 16,800 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மும்பையில் மட்டும் 10,714 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. 400க்கும் அதிகமானோர் அந்த மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்தான், சடலங்களை வைக்க கூட இடமில்லாத நிலைக்கு மும்பை மருத்துவமனை சென்றுவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.