மும்பை மருத்துவமனையில் பயங்கரம்.. தீ விபத்தில் சிக்கி 6 மாத குழந்தை உள்பட 8 பேர் பலி
மும்பை: மும்பை அருகே, மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர்.
அந்தேரி மரோல் பகுதியில் உள்ள காம்கார் என்று அழைக்கப்படும் தொழிலாளர் நல மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையின் 4-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயின் காரணமாக ஏற்பட்ட புகையில் சிக்கி நோயாளிகள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அதனால் தப்பிக்க வழி தெரியாமல் அவர்கள் பரிதவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 12 வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்பு படையினர் ஆஸ்பத்திரிக்குள் இருந்து ஏராளமானோரை மீட்டனர்.
அவர்களில் பலர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். சிலர் புகையில் சிக்கி மூச்சு திணறி மயங்கிய நிலையில் காணப்பட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் அருகில் உள்ள 5 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அவர்களில் 6 மாத குழந்தை உள்பட 6 நோயாளிகள் பலியானது தெரியவந்தது.
Mumbai: A Level-3 fire breaks out at ESIC Kamgar Hospital in Andheri, rescue operations underway. No casualty reported. #Maharashtra pic.twitter.com/r84978rs9Z
— ANI (@ANI) December 17, 2018
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், இந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று மஹாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.