மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்
மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் இன்று ராஜினாமா செய்தார். தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கோஷ்யாரியிடம் பட்னாவிஸ் இன்று நேரில் கொடுத்தார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 105 இடங்களைப் பெற்ற பாஜக 56 தொகுதிகளில் வென்ற சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தது.

ஆனால் அதிகாரப் பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி ஆகிய பிரச்சனைகளால் பாஜக-சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்கவில்லை. இந்நிலையில் இன்று ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்தார்.
அவருடன் அமைச்சரவையும் பதவி விலகியது. தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவில் காபந்து அரசு நடைமுறையில் இல்லை.
இன்று நள்ளிரவுடன் மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலம் முடிவடைகிறது. மகாராஷ்டிராவில் புதிய அரசு அமையாத நிலையில் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
ஊழலற்ற நேர்மையான அரசு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கோஷ்யாரி ஏற்றுக் கொண்டார். கடந்த 5 ஆண்டுகளில் ஊழலற்ற நியாயமான நேர்மையான ஆட்சியை வழங்கினோம்.
மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எங்களது ஆட்சி காலத்தில் 75% பணிகளை முடித்துவிட்டோம்.
5 ஆண்டுகளாக மகாராஷ்டிராவின் முதல்வராக சேவையாற்ற அனுமதித்த பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆட்சியில் சமபங்கு குறித்து எனது முன்னிலையில் சிவசேனாவுடன் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டுகள் வழங்குவதற்கு ஒருபோதும் ஒப்புக் கொண்டது இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications