அர்னாப் கோஸ்வாமியை ஜெயிலுக்கு அனுப்பிய சிவசேனா எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கப் பிரிவு ரெய்டு
மும்பை: ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை சிறைக்கு அனுப்ப காரணமாக இருந்த சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் ஓவாலா-மைஜ்வாடா சட்டசபை தொகுதியின் சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக்தான், அர்னாப் கோஸ்வாமி மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்தார். மேலும் உள்கட்டமைப்பு வல்லுநர் அன்வய் நாயக் தற்கொலை தொடர்பான விசாரணையை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அன்வய் நாயக் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரித்த மகாரஷ்டிரா போலீசார் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒருவார காலம் அர்னாப் கோஸ்வாமி சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் அர்னாப் கோஸ்வாமி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில்தான் பிரதாப் சர்நாயக்குக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 10 இடங்களில் அமலாக்கப் பிரிவினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். பிரதாப் சர்நாயக்குக்கு சொந்தமான Tops Group நிறுவனமும் சோதனைக்குள்ளானது. பிரதாப் சர்நாயக் மகனும் அமலாக்கப் பிரிவு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
அமலாக்கப் பிரிவின் இந்த சோதனைகளுக்கு சிவசேனா கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காக அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் ஏவிவிடப்படுகின்றன எனவும் அவர் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications