உத்தவ் தாக்கரே கோஷ்டியின் கால்களை உடைத்து போடுங்க.. ஷிண்டே கோஷ்டி எம்.எல்.ஏ. பேச்சால் டென்ஷன்
மும்பை: சிவசேனாவின் உத்தவ் தாக்கரே கோஷ்டி ஆதரவாளர்கள் கால்களை உடைத்துப் போடுங்கள் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு எம்.எல்.ஏ. பேசிய பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என்ற பஞ்சாயத்து முடியவில்லை. சிவசேனா தங்களுக்குதான் சொந்தம் என்கிறது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டி. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் சென்றுள்ளது ஏக்நாத் கோஷ்டி.

ஆனால் நாங்களே உண்மையான சிவசேனா; இதில் தேர்தல் ஆணையம் தலையிடக் கூடாது என்கிறது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா. உச்சநீதிமன்றமும் அண்மையில், சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டியின் Prakash Surve என்ற எம்.எல்.ஏ. பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் Prakash Surve பேசியதாவது: நீங்கள் உத்தவ் தாக்கரே கோஷ்டியினரின் கால்களை உடைத்துவிடுங்கள்.. நீங்கள் அவர்களது கால்களை உடைக்காவிட்டால் உங்கள் கால்கள் உடைக்கப்பட்டுவிடும். அப்படி நீங்கள் அவர்களது கால்களை உடைத்தால் உடனே ஜாமீனில் நான் வெளியே எடுக்கிறேன். இவ்வாறு Prakash Surve கூறியுள்ளார்.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கோஷ்டியினர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசாரோ, சர்ச்சைக்குரிய வீடியோவின் உண்மை தன்மை தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம். அதன்பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு அமைந்தும் 40 நாட்களுக்கு பின்னரே அமைச்சரவை பதவி ஏற்றது. அதுவும் முக்கியமான துறைகள் பாஜக தன் வசம் வைத்துக் கொண்டது. இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ., வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருப்பது ஷிண்டே அரசை சர்ச்சையில் சிக்க வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications