பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யபட்ட சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமிக்கு கொரோனா தொற்று
மும்பை: எல்கர் பரிஷத் - பீமா கோரேகான் வன்முறை வழக்கில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழக சமூக செயற்பாட்டாளரான 84 வயது பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களுக்கும் மராத்தியர்களுக்கும் இடையிலான போரின் 200வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ல் நடைபெற்றது. பெரும் எண்ணிக்கையில் தலித்துகள், சமூக செயற்பாட்டாளர்கள் இதில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது மிகப் பெரும் வன்முறை வெடித்தது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக சனிவர் வாடாவில் எல்கர் பரிஷத் நிகழ்வு நடைபெற்றது. இதில்தான் பீமா கோரேகான் வன்முறைக்கு தூண்டிவிடப்பட்டது என்பது வழக்கு. இந்த வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ. ஏராளமான சமூக செயற்பாட்டாளர்களை சிறையில் அடைத்தது. ஜார்கண்ட்டில் ஆதிகுடிகளின் உரிமைக்காக பாடுபட்டு வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டேன் ஸ்வாமி என்ற 84 வயது பாதிரியாரையும் கைது செய்தது என்.ஐ,ஏ.
ஸ்டேன் ஸ்வாமிக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்பது என்.ஐ.ஏ. குற்றச்சாட்டு. மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்டேன் ஸ்வாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து உரிய சிகிச்சை வழங்க கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், தனியார் மருத்துவமனையில் ஸ்டேன் ஸ்வாமிக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது.
இதனடிப்படையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்டேன் ஸ்வாமி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஸ்டேன் ஸ்வாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தலோஜா சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications