மதக்கலவரங்களை கண்டு ராமரே அமைதி இழந்திருப்பார்..ராமநவமி கலவரம் குறித்து சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்
மும்பை: மத்தியப்பிரதேசத்தில் ராம நவமி ஊர்வலங்களை வைத்து நடத்தப்பட்ட மதக்கலவரங்களை கண்டு ராமரே அமைதி இழந்து இருப்பார் என சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார்.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் ரோக்டோக் என்ற பெயரில் சஞ்சய் ராவத் கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார்.
அதில், "எவர் அமைதியை கெடுத்து, அடிப்படைவாத தீயை பற்ற வைத்து தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறாரோ அவர், இரண்டாவது தேச பிரிவினைக்கு விதை போடுகிறார் என்று அர்த்தம்." எனக்குறிப்பிட்டு இருக்கிறார்.

ராம நவமி ஊர்வலங்கள்
ஏப்ரல் 10 ஆம் தேதி ராமநவமி ஊர்வலத்தின்போது நாடு முழுவதும் வெடித்த மதக்கலவரங்களை சுட்டிக்காட்டிய சஞ்சய் ராவத், அது ஒரு நல்ல அறிகுறி இல்லை என கூறி இருக்கிறார். "முன்பெல்லாம் ராம நவமி ஊர்வலங்கள் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் தொடர்புடையதாக இருந்தது. ஆனால், இன்றோ வாள்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

மசூதிகளுக்கு வெளியே பிரச்சனை
மதக்கலவரங்கள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. மசூதிகளுக்கு வெளியே பிரச்சனை செய்து வன்முறையை ஏற்படுத்துகின்றனர். ராம நவமி ஊர்வலத்தின்போது கடவுள் ராமரின் பெயரால் வாள்களை காட்டுகிறார்கள். அது இந்துத்துவமே அல்ல. கடவுள் ராமரின் பெயரில் மத கலவரங்களை ஏற்படுத்துவது ராமரை அவமதிக்கும் செயல்.

ராமரே அமைதியிழந்து இருப்பார்
மத்திய பிரதேச மாநிலம் கார்கொனில் அரங்கேறிக் கொண்டிருக்கும் மத பிரச்சனைகளை கண்டால் கடவுள் ராமர் கூட அமைதி இழந்து இருப்பார். மகாராஷ்டிராவில் ஏப்ரல் 2 ஆம் தேதி இந்து மற்றும் மராத்தி புத்தாண்டை முன்னிட்டு மும்பையில் குதி பத்வா கலாச்சார விழா கொண்டாடப்பட்டது. ஆனால், எந்தவிதமான வன்முறை சம்பவங்களும் நடக்கவில்லை.

இஸ்லாமியர்கள் கற்களை வீசினார்களா?
ஊர்வலங்கள் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லும்போது எந்தவிதமான அசம்பாவீதங்களும் நடக்கவில்லை. இங்கு நடக்காத வன்முறை சம்பவங்கள் ராம நவமி ஊர்வலங்களின்போது மட்டும் ஏன் நடக்கின்றன? பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் ராம நவமி ஊர்வலங்கள் சென்றபோது இஸ்லாமியர்கள் கற்களை கொண்டு தாக்கினார்கள் என்று செல்லப்படுவதை யாராலும் நம்ப முடிகிறதா?

குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வித்திடும்
மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே இங்கு பாஜகவின் கொள்கைகளை செயல்படுத்த நினைக்கிறார். பாஜகவின் கொள்கைகளில் மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கி அதன் அடிப்படையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர வழிவகுக்கும்." என்றார்.












Click it and Unblock the Notifications