பீகார் மட்டுமல்ல.. மகாராஷ்டிராவிலும் பாஜகவுக்கு அதிர்ச்சி! ஏக்நாத் ஷிண்டே எடுத்த முடிவால் அப்செட்
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா (ஏக்நாத்) - பாஜக கூட்டணி அரசின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படும் நிலையில் பாஜகவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்த சிவசேனா எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் பதவியை ஏக்நாத் ஷிண்டே வழங்கி இருப்பது பாஜகவை அதிருப்தி அடைய செய்துள்ளது.
மகராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் குஜராத்தில் உள்ள விடுதியில் முகாமிட்டனர். அதன் பின்னர் அசாமில் உள்ள விடுதியில் அவர்கள் தங்கினர்.
இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிட்டார்.
ஆட்சியை காப்பாற்றுவதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாததால் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
“தனியே தன்னந்தனியே” தாமரை -மகாராஷ்டிராவில் பிடித்ததை பீகாரில் இழக்கும் பாஜக.. ரிப்பீட்டாகும் ஆபரேசன்
புதிய அரசு
இதனை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக அம்மாநிலத்தில் ஆட்சியமைத்தது. ஆனால், அமித்ஷாவின் யோசனைபடி ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தார் தேவேந்திர பட்னவிஸ். அன்று முதல் மகாராஷ்டிரா அரசு தரப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அமைச்சர்கள்
துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னவிஸ் பதவி ஏற்றார்கள். ஆனால், இதர இலாக்காக்களில் புதிய அமைச்சர்கள் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தனர். மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னவிஸ், சிவசேனா, பாஜக மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.
அமைச்சர்கள் பதவியேற்பு
இந்த நிலையில் இன்று மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் பாஜகவை சேர்ந்த 18 அமைச்சர்கள் பதவியேற்றனர். காலை 11 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அமைச்சர்களுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார். பாஜகவில் இருந்து சந்திரகாந்த் பாட்டீல், ரவீந்திர சவ்ஹான், மங்கள் பிரபாத் லோதா, விஜயகுமார் காவித், அதுல் சாவே, சுதிர் முங்கதிவர், கிரீஸ் மஹாஜன், சுரேஷ் காடே, ராதாகிருஷ்ண விகே பாட்டீல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சிவசேனா அமைச்சர்கள்
இதில் சிவசேனா ஏக்நாத் அணியை சேர்ந்த அப்துல் சத்தார், தீபக் கேசர்கர், குலாப்ராவ் பாட்டீல், சஞ்சய் ராத்தோட், தாதா பூஷே, சாம்புராஜே தேசாய், சந்தீபன் பூம்ரே, உத்ய சாமந்த், தனசி சாவந்த் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் சஞ்சய் ராத்தோட் உத்தவ் ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது பாஜகவுக்கு எதிராக காட்டமான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
பாஜக அதிர்ச்சி
தேவேந்திர பட்னவிஸ் விட்டுகொடுத்ததன் காரணமாகவே ஏக்நாத் ஷிண்டேவால் முதலமைச்சராக முடிந்த நிலையில், அமைச்சரவை தேர்விலும் முக்கிய இலாக்காக்களை தங்கள் கட்சியினருக்கு ஒதுக்குவதிலும் பிடிவாதம் காட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பூஜா சவார் மர்ம மரணத்தில் சஞ்சய் ராத்தோடுக்கு தொடர்பு இருப்பதாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக குற்றம்சாட்டிய நிலையில், தங்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் அவரை மீண்டும் ஏக்நாத் ஷிண்டே அமைச்சராக நியமித்து இருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.