கொரோனாவை 80 % வரை குணப்படுத்தும் ஃபேவிபிராவிர் மருந்து... மாத்திரை ஒன்றின் விலை ரூ.103
மும்பை: கொரோனாவை 80% வரை குணப்படுத்தக்கூடிய ஃபேவிபுளு மருந்தை மும்பையை சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம் தயாரித்துள்ளது.
வைரஸை எதிர்க்கக் கூடிய இந்த ஃபேவிபிராவிர் (ஃபேவிபுளு) மாத்திரை ஒன்றின் விலை ரூ.103 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஃபேவி புளு மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தாக்கினாலும் பயமில்லை எளிதில் மீளலாம் - தமிழ்நாட்டில் 30,271 பேர் டிஸ்சார்ஜ்
மும்பை நிறுவனம்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுப்பதற்காக மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கிளென்மார்க் நிறுவனம் ஃபேவிபிராவிர் (ஃபேவிபுளு) என்ற மருந்தை தயாரித்துள்ளது. கொரோனா பாதிப்பு லேசாக உள்ளவர்கள் மற்றும் அபாயக் கட்டத்தை எட்டாதவர்களுக்கு இந்த மருந்தை கொடுத்ததில் 80% வரை நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கிறது. இந்த மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான அனுமதியை டி.சி.ஜி.ஐ. வழங்கியுள்ளது.
இந்தியாவில் விற்பனை
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கிவிட்டதால் இந்தியா முழுவதும் இந்த மருந்து விரைவில் விற்பனைக்கு வரக்கூடும் எனத் தெரிகிறது. மாத்திரை ஒன்றின் விலை ரூ.103 என நிர்ணயிக்கப்படுள்ளதால் 34 மாத்திரைகள் அடங்கிய ஒரு பெட்டியின் விலை ரூ.3,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குவதால் இந்த மருந்தின் தேவை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
மருந்தகங்கள்
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளதால் ஃபேவிபிராவிர் மாத்திரை அனைத்து மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படும். ஆனால் மருத்துவர் சீட்டு இல்லாமல் இந்த மருந்தை யாரும் பெற முடியாது. அதேபோல் நோயாளிகளின் ஒப்புதலை கையெப்பம் மூலமாக பெற்ற பின்னரே அவர்களுக்கு ஃபேவிபிராவிர் மருந்து கொடுக்கப்படும்.
புதிய மருந்து
இதனிடையே கொரோனா முற்றிய நோயாளிகளுக்காக ஃபேவிபிராவிர், யூமிபெனோவிர் என்ற இரு மருந்துகளை பயன்படுத்தி புதிய மருந்து கண்டறியும் முயற்சியிலிம் கிலேன்மார்க் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கொரோனாவுக்கு எந்த மருந்தும் இல்லை என்ற சூழலில், சற்றே ஆறுதல் அளிக்கக்கூடிய வகையில் ஃபேவிபிராவிர் (ஃபேவிபுளு) மாத்திரையை கண்டுபிடித்துள்ளது கிளென்மார்க் நிறுவனம்.