‛திவாலாகி விட்டோம்’.. இந்தியாவின் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்துக்கு பெரிய அடி.. விமான சேவைகள் திடீர் ரத்து
மும்பை: கடும் நிதி பற்றாக்குறையால் சிக்கி தவிக்கும் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் திவால் தீர்மான நடவடிக்கைக்கான நோட்டீசை தாக்கல் செய்துள்ளது. இதனால் நாளையும், நாளை மறுநாளும் அந்நிறுவனம் விமானங்களை இயக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு கோ ஃபர்ஸ்ட் எனும் விமானம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் வாடியா குழுமத்துக்கு சொந்தமானதாகும்.

இந்த நிறுவனம் சார்பில் ஏராளமான விமானங்கள் இயங்கி வருகின்றன. மொத்தம் 59 விமானங்களை இந்த நிறுவனம் இயக்கி வருகிறது. இந்நிலையில் தான் விமானத்துக்கு தேவையான பொருட்களை இந்த நிறுவனம் அமெரிக்காவின் பிராட் அன்ட் விட்னி நிறுவனத்திடம் இருந்து பெற்று வருகிறது.
இந்நிலையில் தான் அமெரிக்க நிறுவனத்தில் இருந்து இன்ஜின்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. தற்போது வரை 28 விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் நிறுவனத்துக்கு கிடைக்க வேண்டிய வருமானம் வரவில்லை. பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் கோ ஃபர்ஸ்ட் நிறுவனமும் நிதி நெருக்கடியை சந்திக்க தொடங்கியது. இந்நிலையில் தான் வாடியா குழுமம் சார்பில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் டெல்லியில் உள்ள தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் திவால் தீர்மானத்துக்கான நோட்டீசை தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம் அந்த நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருப்பது உறுதியாகி உள்ளது.
இதுபற்றி கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கவுசிக் கோனா கூறுகையில், ‛‛திவால் தீர்மான நடவடிக்கைக்கான மனுத்தாக்கல் என்பது துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும் விமான நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் இது செய்யப்பட வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

மேலும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் சார்பில் நாளையும், நாளை மறுநாளும் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே தான் கோ ஃபர்ஸ்ட் நிறுவன விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு விமானம் ரத்து செய்யப்படுவதாக தற்போது மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இக்கட்டான சூழலை சந்தித்துள்ள கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அதுபற்றிய அரசிடம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக விரைவில் டிஜிசிஏ எனும் சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்க உள்ளது. மேலும் தற்போதைய சூழலில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தில் பல்வேறு நிலைகளில் மொத்தம் 5 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தற்போதைய நிதி நெருக்கடி சூழல் என்பது அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications