கோட்சே காந்தியை கொன்றதை இந்து மதத்தோடு தொடர்புபடுத்த தேவையில்லை.. பிரகாஷ் அம்பேத்கர்
மும்பை: மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே ஒரு பயங்கரவாதி தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதனை இந்து மதத்தோடு தொடர்புபடுத்தி பேசக்கூடாது என அம்பேத்கரின் பேரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே எனவும் கூறினார். அவரின் இப்பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய பெண் சாதுவும், போபால் மக்களவை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளருமான பிரக்யா சிங், கோட்சே ஒரு தேசப்பக்தர் என்றார். கடும் எதிர்ப்புகளாலும், கட்சி தலைமையின் கண்டனத்தை அடுத்தும் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில் நாதுராம் கோட்சேவை ஒரு தேசபக்தர் என பாரதிய ஜனதாவைச் சேர்ந்த பிரக்யா சிங் கூறியது குறித்து, சட்ட மேதை அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் நாதுராம் கோட்சே ஒரு பயங்கரவாதி தான் என தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ஒருவரை கொலை செய்வதே பயங்கரவாதம் தான். இதை சொல்லும் அதே சமயத்தில், இந்த பயங்கரவாத செயலுக்கு இந்து மதம் தான் காரணம் என்று கூறுவது சரியல்ல என்றார்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற கலவரங்களுக்கு பாரதிய ஜனதா கட்சிதான் காரணம் என்றும் பிரகாஷ் அம்பேத்கர் குற்றம் சாட்டினார் வரும் மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் தனது கட்சி தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் அவர் கூறினார்
இது குறித்து மேலும் கூறுகையில் மக்களவைத் தேர்தலைப் போலவே சட்டப்பேரவைத் தேர்தலிலும் அனைத்து 288 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட வேண்டும் என்று எனது கட்சித் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அதன்படி வஞ்சித் பகுஜன் அகாடி அனைத்து தொகுதியில் போட்டியிடும் என்றார்












Click it and Unblock the Notifications