மும்பையில் வெளுத்து வாங்கிய மழை... சாலைகளில் வெள்ளம் - ஸ்தம்பித்த போக்குவரத்து
மும்பையில் கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. மும்பை மேற்குப் பகுதியில் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
மும்பை: தென்மேற்குப் பருவமழை மும்பையை சூறையாடி வருகிறது. நகரத்தின் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.
மும்பையில் கடந்த 9ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கொட்டியது பருவமழை.. முதல் நாளே நீரில் தத்தளிக்கும் மும்பை.. பஸ், ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு
16ஆம் தேதி வரைக்கும் மும்பை உள்ளிட்ட கொங்கன் மண்டல பகுதியில் மிகவும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. ரெட் அலெர்ட் எச்சரிக்கையை அடுத்து மும்பை மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இதில் மண்டல கட்டுப்பாட்டு அறைகள், அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் தேவையான மனித வளத்துடன் அனைத்து உபகரணங்கள், சாதனங்களுடன் மிகுந்த எச்சாிக்கையுடன் இருக்க உத்தரவிடப்பட்டது.
மும்பையில் நேற்று காலை முதல் லேசான மழை மும்பையில் பெய்து வருகிறது. நேற்று இரவு நல்ல மழை பெய்தது. இதனால், மழை நீர் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அதேபோல், தானே நகரத்திலும் மழை பெய்து வருகிறது.
மும்பையின் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் ஆங்காங்கே வாகன போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் சாலையில் வாகனங்கள் பல மணிநேரம் ஊர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், வரும் 17 ஆம் தேதி வரை மும்பையில் கனமழை இருக்கும் என எச்சரித்த வானிலை ஆய்வு மையம், மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.