எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குபவர்களால் எப்படி அரசியலமைப்பை பாதுகாக்க முடியும்? ராகுல் கேள்வி
மும்பை: மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மாநிலத்தில் ஆட்சியில் உள்ள 'மகாயுதி' கூட்டணி மீது ராகுல் காந்தி சரமாரியான விமர்சனங்களை அடுக்கியுள்ளார். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குபவர்கள் எப்படி அரசியலைமைப்பை பாதுகாப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்தது. ஆனால், சிவசேனாவில் இருந்து ஷிண்டே என்பவர் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்று பாஜகவுக்கு ஆதரவு அளித்தார். தேசியவாத காங்கிரஸிலும் இதேதான் நடந்தது. அஜித் பவார் தன்னுடன் சில எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தார்.

இதனால் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சியை இழந்தது. பின்னர் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸும் நீதிமன்றத்தை நாட.. பதிலுக்கு நாங்கள்தான் உண்மையான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என உரிமை கோரி அதிருப்தி எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தை நாடினர். இறுதியாக ஷிண்டே தரப்பினருக்கு சிவசேனா சொந்தம் என்று அறிவிக்கப்பட்டது. உத்தவ் தரப்பினர் தங்களை, உத்தவ் சிவசேனா(UBT) என அழைத்துக்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.
அஜித் பவாருக்கும் இதேபோல தீர்ப்பளித்தது. ஆனால், சரத் பவாரின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இப்படியாக தேர்தல் பிரசார களம் சூடுபிடித்திருக்கிறது
மகாராஷ்ராடிராவில் இழந்த ஆட்சியை மகா விகாடி அகாஸ் கூட்டணி கைப்பற்றுமா? அல்லது தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுமா? என்கி கேள்வி எழுந்திருக்கிறது. இக்கேள்விக்கு நவ.20ம் தேதி நடக்கும் சட்டப்பேரவை தேர்தல் பதில் சொல்லும். தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களுடன் இரு கூட்டணிகளும் களமிறங்கியுள்ளன.
இன்று மாகராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில், மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அரசியலமைப்பு சட்டம்தான் இந்தியாவின் டிஎன்ஏ என்றும், ஆனால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் பாஜக கூட்டணியால் எப்படி இதை பாதுகாக்க முடியும் எனவும் கேள்வியை எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் மகாராஷ்டிராவில் சிவாஜி சிலை இடிந்து விழுந்த சம்பவம் ஏற்கெனவே பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பிரதமர் நரேந்திரமோடியே நேரடியாக மகாராஷ்டிர மக்கள் மத்தியில் மன்னிப்பு கோரினார். ஆக இந்த சவால்களை எல்லாம் அரசு எப்படி கடந்து வரப்போகிறது என்பது கேள்விக்குறியாக எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications