288ல் 209இல் வெற்றி கன்ஃபார்ம்.. மகாராஷ்டிர தேர்தலில் இதுதான் நடக்குமாம்.. பரபர சர்வே முடிவுகள்
மும்பை: மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குக் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே மகாராஷ்டிர தேர்தலில் யார் வெல்வார் என்பது குறித்து சிவசேனா நடத்திய உட்கட்சி சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் இப்போது ஷிண்டே முதல்வராக இருக்கிறார். அங்கு பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி ஆகிய கட்சிகள் கூட்டணி அரசில் இருக்கிறது.

அங்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அம்பர்நாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே சிவசேனா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் கிரண் சோனாவானே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
சிவசேனா சர்வே: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் சிவசேனா மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்ற அவர், மகாராஷ்டிர சட்டசபையில் உள்ள 288 தொகுதிகளில் 209 தொகுதிகளில் மகாயுதி (பாஜக கூட்டணி) கூட்டணிக்குச் சாதகமான சூழல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
என்ன சொல்கிறார்: இது குறித்து சோனாவானே மேலும் கூறுகையில், "லோக்சபா தேர்தலுக்குப் பிறகு சட்டசபைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு நாங்கள் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறோம். சமீபத்தில் நாங்கள் உட்கட்சி சர்வேயை நடத்தினோம். ஒவ்வொரு தொகுதியிலும் பூத் அளவுக்குச் சென்று இந்த சர்வே நடத்தினோம். மாநிலத்தில் எங்களுக்குச் சாதகமான சூழல் இருப்பது இதில் தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சீட்கள் உள்ள நிலையில், அதில் 209 சீட்களில் பாஜக கூட்டணி வெல்லும் வாய்ப்பு இருப்பது எங்கள் சர்வேயில் தெரிய வந்தது" என்றார்.
மகாராஷ்டிராவில் உள்ள மகாயுதி கூட்டணியில் இப்போது பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் என்சிபி ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த 3 கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை எனத் தகவல் வெளியான நிலையில், இது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுத்த சோனாவானே, சீட் பங்கீடு தொடர்பாக மகாயுதியில் எந்த சர்ச்சையும் இல்லை என்றும் சீட் பகிர்வு விரைவில் முடிவடையும் என்றும் கூறினார்.
காங்கிரஸ் சர்வே: மகாராஷ்டிராவில் இப்போது ஷிண்டே தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. அங்கு வரும் நவ. மாதம் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனாவின் இந்த சர்வே காங்கிரஸ் நடத்திய உட்கட்சி சர்வேவுக்கு நேர் எதிராக இருக்கிறது. சமீபத்தில் அங்குக் காங்கிரஸ் நடத்திய சர்வே என்று ஒன்று வெளியானது. அதில் மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் குறிப்பாக காங்கிரஸ் மட்டும் 85 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டு இருந்தது.
லோக்போல் சர்வே: அதேபோல லோக்போல் என்ற அமைப்பு நடத்திய சர்வேயிலும் காங்கிரஸ் கட்சியே வெல்லும் எனக் கூறப்பட்டு இருந்தது. லோக்போல் சர்வேயில் அங்கு மொத்தமுள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ்- சரத் பவார் என்சிபி- தாக்ரே சிவசேனா கூட்டணி 141 முதல் 154 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டு இருந்தது. பாஜகவின் என்டிஏ கூட்டணி 115 முதல் 128 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications