‛நான் மோடியை எதிரியாக பார்க்கவில்லை’.. டோனை மாற்றிய உத்தவ் தாக்கரே! திரும்பும் ‛இந்தியா’ கூட்டணி
மும்பை: பிரதமர் மோடியை நான் எதிரியாக பார்க்கவில்லை என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் அவரது ஆட்சி கவிழவும், கட்சி 2 ஆக உடையவும் பிரதமர் மோடி தான் காரணம் என கூறி தொடர்ந்து தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் உத்தவ் தாக்கரேவின் இந்த பேச்சு என்பது ‛இந்தியா' கூட்டணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2019 சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா-பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. இரு கட்சிகளும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டது. ஆனால் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியது. அதோடு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது.

உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். இந்த ஆட்சி இரண்டரை ஆண்டுகள் நடந்தது. இதையடுத்து சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கைகோர்த்தனர். உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம் சிவசேனா 2 ஆக உடைந்தது. உத்தவ் தாக்கரே அணி சிவசேனா (யூபிடி) எனவும், உண்மையான சிவசேனாவாக ஏக்நாத் ஷிண்டேயும் செயல்பட்டு வருகிறார்.
மேலும் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக செயல்பட்டு வருகிறார். மகாராஷ்டிராவில் ஆட்சி கலைப்பு மற்றும் சிவசேனா 2 பிரிவுகளாக பிரிந்ததற்கு பிரதமர் மோடி மற்றும் பாஜக தான் காரணம் என உத்தவ் தாக்கரே மற்றும் அவரது அணியின் தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் உள்ள ‛இந்தியா' கூட்டணியில் உத்தவ் தாக்கரே இடம்பிடித்துள்ளார்.
மகாராஷ்டிராவை பொறுத்தமட்டில் உத்தவ் தாக்கரே அணி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ‛இந்தியா' கூட்டணியில் உள்ளன. இன்னும் அங்கு தொகுதி பங்கீடு என்பது நடக்கவில்லை. இழுபறி நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் உத்தவ் தாக்கரே திடீரென தனது டோனை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது மகாராஷ்டிரா மாநிலம் ராஜாபூரில் நடந்த நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே பேசினார். அப்போது அவர், ‛‛நான் பிரதமர் மோடியை எதிரியாக பார்க்கவில்லை. ஆனால் அவர் என்னை எதிரியாக பார்க்கிறார். சிவசேனா 2 ஆக உடைய அவர் தான் என்ஜினீயராக செயல்பட்டு எனது கட்சியை திருடியுள்ளார். பிரதமர் மோடி இதற்கு முன்பு சிக்கலை எதிர்கொண்டபோது பாலசாகேப் தாக்கரே தான் உதவினார். ஆனால் இப்போது மோடி திருடனுக்கு (மறைமுகமாக ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்துள்ளார்) உதவி செய்து அவரை மாநில முதல்வராக்கி உள்ளார்'' என்றார்.
சமீப காலமாக உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். ஆனால் இப்போது உத்தவ் தாக்கரே தனது டோனை மாற்றி தனது தந்தை பிரதமர் மோடிக்கு உதவினார். ஆனால் பிரதமர் மோடி தனக்கு உதவி செய்யவில்லை. தான் ஒருபோதும் பிரதமர் மோடியை எதிரியாக பார்க்காவில்லை. ஆனால் பிரதமர் மோடி தான் தன்னை எதிரியாக பார்க்கிறார் என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதோடு உத்தவ் தாக்கரே தற்போது ‛இந்தியா' கூட்டணியில் உள்ளார். இத்தகைய சூழலில் உத்தவ் தாக்கரேவின் இந்த பேச்சு ‛இந்தியா' கூட்டணி கட்சியினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா என்பது பிரிக்க முடியாத கூட்டணியாக இருந்து வந்தது. சிவசேனா எப்போதும் ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப்படாத நிலையில் உத்தவ் தாக்கரே 2019ல் பாஜகவிடம் தனக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் பாஜக மறுத்தது. இதனால் அவர் பாஜகவுடன் கூட்டணியை விட்டு விலகி தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். அதன்பிறகு சரியாக இரண்டரை ஆண்டுகள் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த நிலையில் ஆட்சி கலைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications