டிரம்ப் பாணியில்.. பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதி மசூத் அசாரை பிரதமர் மோடி தூக்கணும் - ஓவைசி
மும்பை: ‛‛அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்துள்ளார். டிரம்பால் முடியும்போது பாகிஸ்தான் சென்று மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாத தாக்குதலின் மூளையாக இருந்த பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதி மசூத் அசாரை நம் நாட்டுக்கு கொண்டு வர முடியும். இதற்கு நம் ராணுவ படைகளை அனுப்பாமல் இருப்பது ஏன்?'' என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறினார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசும்போது கூறியதாவது: அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் படைகள் வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்து அமெரிக்கா அழைத்து சென்றுள்ளதை கேள்விப்பட்டுள்ளோம்.

அமெரிக்க அதிபர் டிரம்பால் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அவரது சொந்த நாட்டில் இருந்து கடத்த முடியும் எனும்போது உங்களால் (பிரதமர் மோடி) பாகிஸ்தான் சென்று மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாத தாக்குதலின் மூளையாக இருந்த பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதி மசூத் அசார் நம் நாட்டுக்கு கொண்டு வர முடியும். டிரம்பால் முடியுமென்றால் மோடி ஜி, நீங்களும் சளைத்தவர் அல்ல.
நீங்களும் அதைச் செய்தே ஆக வேண்டும். மோடி அவர்களே, நாங்கள் உங்களிடம் கேட்கிறோம். மசூத் அசாராக இருக்கட்டும் அல்லது லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதிகளாக இருக்கட்டும்.அவர்களை பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக படைகளை அனுப்ப முடியாமல் இருப்பது ஏன்?'' என கேள்வியும் எழுப்பினார்.
மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்தது. லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் நுழைந்து தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தினர். இதில் 170 பேர் பலியாகினர். 300 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நம் நாட்டில் நடந்த மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாகும். அதேபோல் மசூத் அசாரும் நம் நாட்டின் பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டுள்ளதோடு, தற்போது பாகிஸ்தானில் பதுங்கி உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications