மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து விலக ரெடி!ராஜினாமா கடிதம் தயாராக உள்ளது: உத்தவ் தாக்கரே பளிச்
மும்பை: தம்முடைய ராஜினாமா கடிதம் தயாராக உள்ளதாகவும் போர்க்கொடி தூக்கி உள்ள ஏக்நாத் ஷிண்டே விரும்பினால் முதல்வர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாகவும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Recommended Video
மகாராஷ்டிரா அரசியலில் நிலவும் குழப்பங்கள் தொடர்பாக இன்று சமூக வலைதளம் மூலம் உத்தவ் தாக்கரே கூறியதாவது:
சிவசேனா தமது இந்துத்துவா கொள்கையை ஒருபோதும் கைவிட்டது இல்லை. சிவசேனா இந்துத்துவா கொள்கையில் இருந்து விலகிச் சென்றதும் இல்லை. இந்துத்துவா என்பது எங்களது மூச்சு. இந்துத்துவா என்பது எங்களது ஆன்மா.
அடுத்த அதிரடி.. உத்தவ் தாக்ரே சரியில்லை.. கட்சி கொள்கையே போச்சு.. 34 சிவசேனா எம்எல்ஏக்கள் தீர்மானம்
இந்துத்துவா கொள்கை
இந்துத்துவா கொள்கைக்காக யார் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி பேசுகிற நேரம் இது இல்லை. பால்தாக்கரேவின் இந்துத்துவா கொள்கைகளை நான் முன்னெடுத்துச் செல்கிறேன். பால்தாக்கரேவின் கொள்கைகளை பின்பற்றவில்லை என சிலர் சொல்கின்றனர். அப்படி சொல்கிறவர்கள் பால்தாக்கரேவின் சிந்தனைகள் என்ன என்பதை சொல்லவேண்டும். அவர் காலத்து சிவசேனாதான் இப்போதும் உள்ளது.
அதிர்ச்சி, ஆச்சரியம்
மகாராஷ்டிராவில் இருந்து வெளியே சென்று எம்.எல்.ஏக்கள் சிலர் என்னை தொடர்பு கொண்டு திரும்பி வருவதாக கூறியுள்ளனர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நான் முதல்வராக இருக்கக் கூடாது என கூறினால் அது வேறு விவகாரம். இன்று காங்கிரஸ் கட்சியின் கமல்நாத்தும் கூட நான் முதல்வராக தொடர வேண்டும் என்கிறார். ஆனால் என்னுடைய கட்சியினர் நான் முதல்வராக இருக்கக் கூடாது என்று சொல்வது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.
உடல்நலன் பாதிப்பு
2019-ம் ஆண்டு 3 கட்சிகளும் கூட்டணி அமைத்த போது, என்னை முதல்வர் பதவி ஏற்குமாறு சரத்பவார் கேட்டுக் கொண்டார். அப்போது எனக்கு அனுபவம் கிடையாது. ஆனாலும் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். சரத்பவாரும் சோனியா காந்தியும் எனக்கு உதவினார்கள். அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்தார்கள். கடந்த சில மாதங்களாக நான் பொதுமக்களை சந்திக்கவில்லை என்பது உண்மைதான்; எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது; உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தது. இப்போதுதான் மக்களை மீண்டும் சந்தித்து வருகிறேன்.
ராஜினாமா கடிதம் ரெடி
சிவசேனா எம்.எல்.ஏக்கள், நான் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது என விரும்பினால் முதல்வர் பங்களாவில் இருந்து அப்படியே வெளியேற தயாராக இருக்கிறேன். என்னுடைய ராஜினாமா கடிதம் தயாராகவே உள்ளது.என்னுடன் சிவசேனா கட்சியின் தொண்டர்கள் இருக்கும் வரை எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. சிவசேனா எம்.எல்.ஏக்கள் அழைத்துச் செல்லப்பட்டார்களா? அவர்களாகவே சென்றார்களா? என்பது தொடர்பான பிரச்சனைக்குள் நான் செல்ல விரும்பவும் இல்லை. முதல்வர் பதவி என்பது வரும் போகும்; ஆனால் மக்கள் வைத்துள்ள பற்றுதான் அசைக்க முடியாத சொத்து. கடந்த 2 ஆண்டுகள் மக்களின் பேரன்பை போதுமான அளவு பெற்றிருக்கிறேன்.
நேருக்கு நேராக சொல்லுங்க..
எம்.எல்.ஏக்கள் ஆதரவு எண்ணிக்கை பிரச்சனை இல்லை; எனக்கு எதிராக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். ஒரே ஒரு எம்.எல்.ஏ. அல்லது ஒரே ஒரு நபர் எனக்கு எதிராக இருந்தாலும் நான் முதல்வர் பதவியில் இருந்து விலகிவிடுகிறேன். ஒரே ஒப்ரு எம்.எல்.ஏ. எனக்கு எதிராக இருந்தாலும் அது எனக்கு அவமானம். சிவசேனாவை சேர்ந்த யார் ஒருவரும் முதல்வராக முடியும். நேருக்கு நேராக என்னிடம் சொல்லுங்கள்.. நான் முதல்வர் பதவியில் இருந்து விலக தயாராகத்தான் இருக்கிறேன். எனக்கு சிலர் துரோகம் செய்துவிட்டதாக நான் கருதுகிறேன். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.