வலுப்பெறும் இந்தியா-பிரிட்டன் வர்த்தக உறவு! இன்று மோடியை சந்திக்கிறார்.. பிரிட்டன் பிரதமர்
மும்பை: இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்திருக்கும் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், இன்று மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து முக்கிய முடிவுகள் எட்டப்பட இருக்கின்றன.
அமெரிக்காவின் வரியை பிரிட்டனும் எதிர்கொண்டிருக்கிறது. எனவே வர்த்தகத்திற்கு இந்தியாவை பிரிட்டன் அணுகியிருக்கிறது. சமீபத்தில் பிரிட்டன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுடன் தடையற்ற வர்த்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தார். இந்த ஒப்பந்தம் மூலம் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் விலையும் குறையும் என சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த ஒப்பந்தம் 2026ல்தான் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த வர்த்தக உறவுகளை மேம்படுத்த சில நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது பிரிட்டன் பிரதமர் இந்தியா வந்திருக்கிறார். பிரிட்டன் பிரதமருடன் 125 பேர் கொண்ட குழுவும் இந்தியாவுக்கு வந்திருக்கிறது. இந்தக் குழுவில் தலைமை செயல் அதிகாரிகள், பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் குழுமங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழு நேற்று மும்பையில் இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மற்றும் பிரிட்டன் வணிகம் மற்றும் வர்த்தக செயலாளர் பீட்டர் கைல் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். இந்தியா-பிரிட்டன் வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் கூட்டு முயற்சியை செயல்படுத்தும் வழிமுறைகளை ஆராய்வதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, "இந்த சந்திப்பு இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக அமைந்தது. இரு நாட்டு அமைச்சர்களும், ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை கண்காணிக்க கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவை மறுசீரமைக்க ஒப்புக்கொண்டனர். இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாகவும், ஒருங்கிணைந்த வகையிலும் செயல்படுத்த இரு தரப்பினரும் உறுதிபூண்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications