320 கிமீ வேகம்.. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை எப்போது தொடங்கும்! அதிகாரப்பூர்வ தகவல்
மும்பை: இந்தியாவில் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்படும் திட்டங்களில் ஒன்றாக மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் இருக்கிறது. இதன் கட்டுமானம் படுவேகமாக நடந்து வரும் நிலையில், புல்லட் ரயில் சேவை எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. ரயில் சேவை குறித்து முக்கிய அப்டேட்டை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கொடுத்துள்ளார்.
இந்தியாவிற்கான முதல் புல்லட் ரயில் சேவை மும்பை- அகமதாபாத்தில் அமைகிறது. இதற்கான கட்டுமானம் பல ஆண்டுகளாகவே தீவிரமாக நடந்து வருகிறது. இந்த புல்லட் ரயில் சேவை எப்போது தொடங்கும் என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. இதற்கிடையே இந்த புல்லட் ரயில் சேவை எப்போது தொடங்கும் என்பது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சில முக்கிய தகவல்களை அறிவித்துள்ளார்.

புல்லட் ரயில்
அதன்படி மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் அடுத்தாண்டு, அதாவது 2027 ஆகஸ்ட் 15ம் தேதி தயாராகிவிடும் என்றும் அப்போது முதல் புல்லட் ரயில் சேவை படிப்படியாகத் தொடங்கும் என அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். முதற்கட்டமாகக் குஜராத்தில் சூரத்- பிலிமோரா ரூட்டில் ரயில் இயக்கப்படும்.
அடுத்து குஜராத்தில் உள்ள வாபி-சூரத், வாபி-அகமதாபாத் பகுதிகள் இடையே புல்லட் ரயில் சேவை இயக்கப்படும். இறுதியில் மகாராஷ்டிராவின் தானே முதல் அகமதாபாத் என செக்டாரில் புல்லட் ரயில் சேவை தொடங்கும் நிலையில், கடைசியில் முழு மும்பை- அகமதாபாத் வழித்தடம் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என வைஷ்ணவ் குறிப்பிட்டார்.
அதிகாரப்பூர்வத் தகவல்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "புல்லட் ரயில் 2027 ஆகஸ்ட் 15ஆம் தேதி தயாராகிவிடும். முதலில் சூரத் முதல் பிலிமோரா வரை உள்ள பகுதி திறக்கப்படும். அதன் பிறகு, வாபி முதல் சூரத் வரை திறக்கப்படும். பின்னர் வாபி முதல் அகமதாபாத் வரை திறக்கப்படும்.. அதன்பிறகு தானே முதல் அகமதாபாத் வரை திறக்கப்படும். தொடர்ந்து முழுச் சேவை ஆரம்பிக்கும்" என்றார்.
2.15 மணி நேரம்
508 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் நாட்டின் ரயில்வே உட்கட்டமைப்பில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவர் மும்பையில் இருந்து அகமதாபாத்திற்குச் சுமார் 2.15 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.
புல்லட் ரயில்
கடந்த 2014ல் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தவுடனேயே புல்லட் ரயில் திட்டம் குறித்த பேச்சு ஆரம்பித்தது. சீனா மற்றும் ஜப்பான் என இரு நாடுகளிடம் புல்லட் ரயில் தொழில்நுட்பம் உள்ள நிலையில், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு ஜப்பான் தொழில்நுட்பத்தில் புல்லட் ரயில் சேவையை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது. 2017ல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் 2023 டிசம்பர் மாதத்திற்குள் இந்த முடிக்கக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற சிக்கல்களால் ஏற்பட்ட தாமதங்கள், திட்டத்தின் காலக்கெடுவை மாற்றியமைத்தன.
கட்டுமானம் தீவிரமாக நடந்து வரும் சூழலில், அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்துப் பணிகளும் முடிந்து படிப்படியாக ரயில் சேவை ஆரம்பிக்குமாம். முதலில் சூரத் மற்றும் வாபி இடையே 100 கி.மீ. தூரத்தில் புல்லட் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications