சபாஷ் ரத்தன் டாடா.. முன்னாள் ஊழியருக்காக.. இப்படியும் ஒரு தொழிலதிபர் இருக்க முடியுமா.. நெகிழ்ச்சி!
மும்பை: தொழிலதிபர் ரத்தன் டாடா தனது முன்னாள் ஊழியர் ஒருவருக்காக செய்த சத்தம் இல்லாத ஒரு செயல் சமூக வலைத்தளங்களில் மக்களால் சிலாகிக்கப்படுகிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் மற்றும் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் ரத்தன் டாடா. ஆனால் சிறிதளவுகூட சமூக ஓட்டத்திலிருந்து அவர் விலகி இருப்பது கிடையாது என்பதுதான் சிறப்பம்சம்.
வெளியே தெரியாமல் பல்வேறு உதவிகளையும் ரத்தன் டாடா செய்தபடி இருக்கிறார். தனது தொண்டு நிறுவனம் மூலமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்கிறார்.
"கடைத் தெருவின் கதை சொல்லி.." புகழ்பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன் மறைந்தார்! கமல்ஹாசன் இரங்கல்
|
வெளியான புகைப்படம்
இவையெல்லாம் பலருக்கும் தெரிந்த விஷயங்கள்தான். ஆனால், அவர் தற்போது முன்னாள் ஊழியர் ஒருவருக்காக செய்துள்ள செயல்தான், பலரது புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது. சத்தமே இல்லாமல் அவர் செய்த அந்த விஷயம் தற்போது புகைப்படமாக வெளியாகி சுற்றிவருகிறது.
முன்னாள் ஊழியர்
ரத்தன் டாடா நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்து, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதுபற்றி இவருக்கு தற்போது தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர் பணியில் இல்லை என்ற போதிலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை பார்க்க வேண்டும் என்று கிளம்பி சென்றுவிட்டார் ரத்தன் டாடா.
ஊர் விட்டு ஊர்
இதுகூட ஒரு பெரிய விஷயம் இல்லை. அந்த ஊழியர் இருப்பது மும்பையில் கிடையாது. புனே நகரத்தில். 83 வயதாகும் நிலையில், முன்னாள் ஊழியருக்காக, இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்றெல்லாம் யோசிக்கவில்லை ரத்தன் டாடா. மீடியாக்கள் உள்ளிட்ட எந்த விளம்பரமும் இல்லாமல் நேரடியாக முன்னாள் ஊழியர் வீட்டுக்கே சென்று உடல் நலம் விசாரித்துள்ளார். அவரிடம் முன்னாள் ஊழியர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு பேசக்கூடிய புகைப்படத்தை யாரோ எடுத்துள்ளனர். அவர்களுடன் மிகவும் பணிவாக பேசிக்கொண்டிருக்கிறார் ரத்தன் டாடா.
சபாஷ் ரத்தன் டாடா
இந்த புகைப்படம் யோகேஷ் தேசாய் என்பவரால் லிங்டின் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். அது தற்போது வைரலாக சுற்றிவருகிறது. சமூக வலைதளங்களில் ரத்தன் டாடா பற்றி புகழ்ந்து நெட்டிசன்கள் சிலாகித்து வருகிறார்கள். பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய அங்கீகாரம் தராத பல நிறுவனங்கள் இருக்கும் நாட்டில், முன்னாள் ஊழியர் ஒருவரை, வயது முதிர்ந்த காலத்திலும், வேறு ஒரு ஊருக்குச் சென்று பார்த்து நலம் விசாரித்து வருவது என்பதெல்லாம் யாரும் நினைத்துக் கூட பார்த்திராத விஷயம். ஆனால், எந்த விளம்பரமும் இல்லாமல், அதை செய்துவிட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.