அடுத்த வருடமே வருகிறது ஜியோ 5ஜி சேவை.. முகேஷ் அம்பானி செம அறிவிப்பு.. சீன ஆதிக்கம் முடிந்தது
மும்பை: அடுத்த வருடம் முதல் 5ஜி நெட்வொர்க் சேவையை ஜியோ நிறுவனம் துவங்க உள்ளது என்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சேர்மன் முகேஷ் அம்பானி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Recommended Video
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 43வது வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் (ஏஜிஎம்) இன்று நடைபெற்றது. முதல் முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இது நடைபெற்றது.
இதில் பல முக்கிய அறிவிப்புகளை முகேஷ் அம்பானி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப அவரும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

கடன் தீர்ந்தது
முகேஷ் அம்பானி கூறியதை பாருங்கள்: கடந்த ஆண்டின் ஏஜிஎம் உரையில், நிகர கடன் இல்லாத அளவுக்கு முன்னேற வேண்டும் என்ற இலக்கை நான் பகிர்ந்து கொண்டேன். தற்போது நமது இலக்கை விட உயர்ந்த இடத்தை அடைந்துவிட்டோம் என்று தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஜியோவில் கூகுள் முதலீடு
ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 7.7 சதவீத பங்குகளில் கூகுள் நிறுவனம் 33,737 கோடி முதலீடு செய்யும். டேட்டா தேவை அதிகரித்தபோதிலும் (சமீபத்திய மாதங்களில் கொரோனா தாக்கம் காரணமாக), ஜியோ நெட்வொர்க் உறுதியாக உள்ளது. எந்த டேட்டா பிரச்சினையும் ஏற்படவில்லை.

ஜியோ 5ஜி சேவை
புதிதாக முழுமையான 5 ஜி சேவையை, ஜியோ உருவாக்கியுள்ளது, இது இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த 5 ஜி சேவையாக மாறும். உலகத் தரம் வாய்ந்த 5ஜி சேவையை வழங்க ஜியோ தயாராக உள்ளது. அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை துவங்கும். 5ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) கிடைத்தவுடன் வெள்ளோட்ட அடிப்படையில் ஒரு சில நகரங்களில் சேவை துவங்கப்படும். மற்ற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கும், 5ஜி உதவிகளை ஜியோ செய்து தரும். இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஊடகங்கள், நிதி சேவைகள், புதிய வர்த்தகம், கல்வி, சுகாதாரம், விவசாயம், ஸ்மார்ட் நகரங்கள், ஸ்மார்ட் உற்பத்தி மற்றும் ஸ்மார்ட் இயக்கம் போன்ற பல தொழில் விவகாரங்களுக்கு தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சீனா ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது
ஜியோ 5ஜி சேவை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளதன் மூலம், சீனாவின் ஹுவாவே நிறுவனத்தை சார்ந்து இருக்க வேண்டிய தேவை இருக்காது. இது தற்சார்பு பாரதம் திட்டத்திற்கு வலு சேர்க்கும். ஏற்கனவே ஹுவாவே நிறுவனம் தகவல் திருட்டு செய்வதாக பிரிட்டனும், அந்த நிறுவனத்தோடு சேவைகளை துண்டிக்க முடிவு செய்துள்ளது.

5ஜி சேவையின் பலன்கள்
வாகனங்களை இயக்கும்போது குறுக்கே யாராவது வந்துவிட்டால் தானியங்கி முறையில் பிரேக் போடுவதற்கும் 5ஜி தொழில்நுட்பம் உதவும். இதேபோல விவசாயத்துறையில் ட்ரோன்கள் மூலமாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு 5ஜி தொழில்நுட்பம் உதவும்.

ஜியோ கிளாஸ்
மெய்நிகர் என்று அழைக்கப்படக்கூடிய வீடியோ மீட்டிங் எளிதாக நடைபெறும். இதற்காகவே ஜியோ ஒரு கண்ணாடியை (JioGlass) அறிமுகம் செய்துள்ளது, இந்த கண்ணாடி அணிந்து கொண்டால் இணையதள வசதி மூலமாக நாம் யாரை தொடர்பு கொள்கிறோமோ அவர்கள் 3டி தொழில் நுட்பத்தின் உதவியால், நமது நேரில் நிற்பது போல தெரியும். 75 கிராம் தான் இந்த கண்ணாடியின் எடை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications