காஷ்மீர் தாக்குதல்கள்- பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிகளை உடனே ரத்து செய்க.. சீறும் உத்தவ் சிவசேனா!
மும்பை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் வெளிநாடுகளில் பாகிஸ்தானுடனான இந்திய அணியின் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் உடனே மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 9-ந் தேதி முதல் தொடர்ச்சியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். பக்தர்கள் சென்ற் பேருந்து மீது கடந்த 9-ந் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 10 பக்தர்கள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து கதுவா, தோடா உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினரை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் 6 பாதுகாப்பு படை வீர்ர்கள் படுகாயமடைந்தனர்.
என்கவுண்ட்டர் நீடிப்பு: இதனால் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதி உச்ச தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சில இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பல மணிநேர மோதல்களும் நடைபெற்றன.
4 பயங்கரவாதிகள்: இதனிடையே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் 4 பேரின் படங்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 4 நாட்களில் 4 பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவசேனா போர்க்கொடி: இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி எந்த போட்டியிலும் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி இருக்கிறது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா.
பாகிஸ்தானுடனான போட்டிகளை ரத்து செய்க: இது தொடர்பாக உத்தவ் தாக்கரே சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் துபே கூறியிருப்பதாவது: கடந்த 3,4 நாட்களாக ஜம்மு காஷ்மீரின் கதுவா, தோடா உள்ளிட்ட இடங்களில் போலீசார், ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்துள்ளனர். தற்போது பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிசிசிஐ தலைவர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நாங்கள் கடிதம் அனுப்ப இருக்கிறோம். அதில், வெளிநாட்டு மண்ணிலும் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி எந்த ஒரு போட்டியிலும் விளையாடக் கூடாது என வலியுறுத்த உள்ளோம். வெளிநாடுகளில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் உடனே ரத்து செய்ய வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. அப்பாவி பொதுமக்களின் உயிர்களை விட கிரிக்கெட் போட்டிகள் ஒன்றும் முக்கியமானவை கிடையாது. இயல்பு நிலைமை திரும்பி பாகிஸ்தான் மன்னிப்பு கேட்கும் வரை இந்த கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் விளையாடவும் அனுமதிக்கக் கூடாது. பாகிஸ்தானும் அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-ம் நம்முடன் விளையாடிப் பார்க்கிறது. ஆகையால்தான் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம், இவ்வாறு ஆனந்த் துபே தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications