மகாராஷ்டிராவில் விரைவில்.. 24மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையங்கள்..முதல்வர் உத்தவ் தாக்கரே அதிரடி
மும்பை: மகாராஷ்டிராவில் தடுப்பூசி தட்டுப்பாடு தீர்ந்தவுடன், அடுத்த மாதம் முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்,
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் புதிதாக 2.4 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரி வீட்டில் தோண்ட தோண்ட.. பெண்கள் & சிறுமிகளின் சடலங்கள்... எல் சால்வடாரில் செம ஷாக்
இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும்கூட, பல்வேறு மாநிலங்களிலும் தட்டுப்பாடு காரணமாக பணிகள் தொடங்கப்படவில்லை.
தடுப்பூசி பணிகள் நிறுத்தம்
மகாராஷ்டிராவில் 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இருப்பினும், தற்போது 18-44 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி பணிகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில், "பற்றாக்குறை காரணமாக 18-44 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் தடுப்பூசி
அதேநேரம் ஜூன் மாதம் முதல் உற்பத்தி அதிகரிக்கும் என நம்புகிறோம். அதன் பிறகு மாநிலத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையங்களை ஏற்படுத்தவுள்ளோம். 18-44 வயதுடையவர்கள் மகாராஷ்டிராவில் மொத்தம் 6 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான 12 கோடி தடுப்பூசிகளுக்கு ஒரே நேரத்தில் பணம் செலுத்த நாங்கள் தயாராகவே உள்ளோம்.
கொரோனா 3ஆம் அலை
அதேபோல கொரோனா 3ஆம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளோம். மாநிலத்தில் போதியளவு ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அனைவரது ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே கொரோனா பாதிப்பு மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களாகக் கட்டுக்குள் வந்துள்ளது.
குழந்தைகள் ஜாக்கிரதை
கொரோனாவை எங்களால் முழுவதுமாக தோற்கடிக்க முடியவில்லை என்றாலும், அதை பெருவாரியாகக் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். 3ஆம் அலையில் குழந்தைகள் மத்தியில் அதிகமாக வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் அலையில் வயதானவர்கள் மத்தியில் கொரோனா அதிகம் இருந்தது. 2ஆம் இளைஞர்கள் மத்தியில் கொரோனா அதிகம் இருந்தது. 3ஆம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே நாம் தயாராக இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பு
கொரோனா 2ஆம் அலை காரணமாகக் கடந்த மாதம் மகாராஷ்டிரா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அங்கு மாநிலத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு 60 ஆயிரம் வரை சென்றது. அதன் பின்னர் மாநிலத்தில் முழு ஊரடங்கிற்கு இணையான 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரே அங்கு வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.