மகாராஷ்டிரா: முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் 33 சிவசேனா எம்எல்ஏக்கள் சந்திப்பு- அடுத்த வியூகம் என்ன?
மும்பை: மகாராஷ்டிராவில் அதிஉச்ச அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் சிவசேனா கட்சியின் 33 எம்.எல்.ஏ.க்கள் இன்று முதல்வர் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்தனர். மேலும் போர்க்கொடி தூக்கிய அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சி நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் 13 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான இந்த கலகக் குரல் எம்.எல்.ஏக்கள் தற்போது பாஜக ஆளும் குஜராத்தின் சூரத் நகரில் முகாமிட்டுள்ளார். இம்முகாமில் மேலும் பல சிவசேனா எம்.எல்.ஏக்கள் இணையக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அனைத்து எம்.எல்.ஏக்களையும் மும்பைக்கு வரவழைத்தது சிவசேனா. அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 33 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். மேலும் முதல்வர் உத்தவ் தாக்கரேவை 33 எம்.எல்.ஏக்களும் சந்தித்து தங்களது ஆதரவை உறுதி செய்தனர்.
அதேநேரத்தில் குஜராத்தின் சூரத் ரிசார்ட்டில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்திக்க சிவசேனா தலைவர்கள் முயற்சித்தனர். அக்கட்சியின் மிலிந்தர் நர்வேகர், ரவீந்த பதாக் ஆகியோர் சூரத் சென்றனர். ஆனால் இருவருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. மேலும் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடிய தூக்கிய அத்தனை எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை பாயும் எனவும் சிவசேனா எச்சரித்துள்ளது.
இதனிடையே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தங்களது எம்.எல்.ஏக்களைப் பாதுகாப்பதில் தீவிரமாக உள்ளன. மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கடந்த இரண்டரை ஆண்டுகளில் பாஜக மேற்கொண்ட 3-வது ஆட்சி கவிழ்ப்பு முயற்சி. எம்.எல்.சி.தேர்தலில் அனைத்து எம்.எல்.ஏக்களும் எங்கள் கட்சிக்கே வாக்களித்தனர். கட்சி மாறி வாக்களிப்பது என்பது அரசியலில் புதியது அல்ல. தற்போது சிவசேனாவில் கலகக் குரல் எழுப்பியுள்ள ஏக்நாத் ஷிண்டே, முதல்வராக ஆசைப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. அது சிவசேனா கட்சியின் உள்விவகாரம். சிவசேனா கட்சி தலைமை என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் உறுதியாக ஆதரிப்போம். தற்போதைய சூழ்நிலையில் மகாராஷ்டிரா அரசியலில் எந்த ஒரு மாற்றமும் தேவைப்படவும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications