சரத்பவார் என்சிபி கட்சி 2 ஆக பிளவு? அஜித் பவார் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு பாஜகவுக்கு ஆதரவு?
மும்பை: மகாராஷ்டிராவில் புதிய அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), அஜித் பவார் தலைமையில் 2 ஆக பிளவுபடுகிறது. அஜித் பவார் தலைமையிலான என்சிபி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு பாஜகவுக்கு ஆதரவு தர இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் 2019-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக 105; சிவசேனா 63; சரத்பவாரின் என்சிபி 41; காங்கிரஸ் 44 இடங்களில் வென்றன. பாஜகவும் சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்கும் என்கிற நிலைமை இருந்தது. ஆனால் பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்ட சிவசேனா, என்சிபி-காங்கிரஸுடன் இணைந்து புதிய கூட்டணி அமைத்தது. இருந்த போதும் என்சிபியின் அஜித்பவாரை தம் பக்கம் இழுத்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார்; அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இது தொடர்பான வழக்கில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ராஜினாமா செய்தார். அஜித் பவார், என்சிபிக்கே திரும்பிவிட்டார்.

பின்னர் என்சிபி-காங்கிரஸ், சிவசேனா புதிய கூட்டணி ஆட்சி உத்தவ் தாக்கரே தலைமையில் அமைந்தது. இந்த புதிய கூட்டணி ஆட்சியை தொடக்கம் முதலே கவிழ்ப்பதில் பாஜக தீவிரம் காட்டி வந்தது. ஒருகட்டத்தில் சிவசேனா கட்சியே இரண்டாக பிளவுபடுத்தப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனாவின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அத்துடன் பாஜக தலைமையில் புதிய ஆட்சி அமைக்கவும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் சிவசேனா-காங்கிரஸ்- என்சிபி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. பாஜக- சிவசேனா ஏக்நாத் ஷிண்டே பிரிவு கூட்டணி ஆட்சி அமைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சரத்பவாரின் என்சிபி கட்சியில் அஜித் பவார் மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கணிசமான எம்.எல்.ஏக்களுடன் அஜித் பவார், என்சிபியில் தனி அணியை உருவாக்கப் போகிறார் எனவும் கூறப்படுகிறது. அஜித்பவார் தமது எம்.எல்.ஏக்களுடன் பாஜக அரசுக்கு ஆதரவு தரக் கூடும் எனவும் மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்சிபி அஜித் பவார் தலைமையில் உடைந்து பாஜகவை ஆதரித்தால், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பாஜக கை கழுவக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications