மகாராஷ்டிரா: வாக்கு எண்ணிக்கை தொடங்கலை.. முதல்வர் பதவிக்கு முட்டி மோதும் பாஜக, காங்கிரஸ் கூட்டணிகள்!
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆகியவற்றில் 'முதல்வர் பதவி' யாருக்கு என்பது குறித்து கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்கும் நவம்பர் 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்பட இருக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தொடர்பான பலவிதமான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அத்துடன் கடந்த தேர்தல்களில் இத்தகைய தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் பிழையாகிப் போனதும் நிகழ்ந்திருக்கிறது. அதே நேரத்தில் மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பாஜகவின் மகாயுதி மற்றும் காங்கிரஸின் மகா விகாஸ் அகாடி இரு அணிகளுமே சமமான வலிமையுடன் இருப்பதையும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.
இதனால் மகாயுதி, மகா விகாஸ் அகாடி இரு கூட்டணிகளுமே 'ஆட்சி' கனவில் இருக்கின்றனர். அத்துடன் தங்களது கட்சிக்குதான் முதல்வர் பதவி என்பதற்காக இரு கூட்டணிகளில் உள்ள கட்சிகளும் இப்போதே குரல் கொடுக்கவும் தொடங்கிவிட்டன.
பாஜகவின் மகாயுதியில் உள்ள ஷிண்டே சிவசேனாவின் எம்.எல்.ஏ. சஞ்சய் சிர்சத் கூறுகையில், நாளை வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் ஏக்நாத் ஷிண்டேதான் முதல்வராக தொடரப் போகிறார் என கூறினார். ஆனால் மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்புகுலே இதனை நிராகரித்துள்ளார். மேலும் பாஜக தொண்டர்கள் விருப்பமே தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக வேண்டும் என்பதுதான் எனவும் தெரிவித்துள்ளார்.
மகா விகாஸ் அகாடியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோல், காங்கிரஸ் தலைமையில்தான் ஆட்சி அமையும் என்கிறார். ஆனால் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் சஞ்சய் ராவத் இதனை ஏற்க மறுத்திருப்பதுடன் காங்கிரஸ் கட்சியில் யார் முதல்வர் என்பதை அக்கட்சியின் டெல்லி மேலிடம் அறிவிக்க வேண்டும்; அதை மகா விகாஸ் அகாடி கட்சிகள் பரிசீலனை செய்யும் என்றார்.
இன்னொரு பக்கம், ஷிண்டே சிவசேனா அமைச்சர் தீபக் கேசர்கர், தேவைப்பட்டால் மகாயுதி கூட்டணி சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கவும தயார் என புதிர் போட்டுள்ளார். இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications