மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- தனித்துதான் போட்டி.. ராஜ்தாக்கரே திட்டவட்டம்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா இடம் பெறவில்லை; தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று அக்கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜகவை ஆதரித்து ராஜ்தாக்கரே பிரசாரம் செய்த நிலையில் தற்போது சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மட்டும் தேர்தல் நடத்தப்படும் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு. நவம்பர் 23-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரசாரம் செய்தவர் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே. 2006-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து வெளியேறி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை தொடங்கியவர் ராஜ்தாக்கரே. இந்துத்துவா மற்றும் மராத்திய தேசியவாதத்தை தீவிரமாக முன்வைப்பவர் ராஜ்தாக்கரே.
ஆனால் தற்போதைய சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தனித்துதான் போட்டியிடும் என அறிவித்துள்ளார் ராஜ்தாக்கரே. இது தொடர்பாக ராஜ்தாக்கரே கூறுகையில், சட்டசபை தேர்தலில் இதர கட்சிகளை விட அதிகமான இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம். அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு பின்னர் அமையும் ஆட்சியில் நாங்களும் பங்கேற்போம். சுங்க கட்டணம் ரத்து என்பது எங்களது நீண்டகால கோரிக்கை. இதனை பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றி இருப்பது வரவேற்புக்குரியது என்றார்.
மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏக்நாத் ஷிண்டே முன்னிறுத்டப்படலாம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித்பவார் இருவரும் முதல்வர் வேட்பாளராக தாங்கள் முன்னிறுத்தப்பட வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் உத்தவ் தாக்கரே தம்மை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் முதல்வர் வேட்பாளர் குறித்து மவுனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications