அடுத்தடுத்து ஷிண்டே பக்கம் சாயும் எம்எல்ஏக்கள்.. அதிர்ச்சியில் தாக்கரே.. பரபரக்கும் மகாராஷ்டிரா
மும்பை: மகாராஷ்டிர அரசியலில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் மோசமாகி உள்ள நிலையில், அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் அதிருப்தி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் தலைமறைவாகி உள்ளார். இப்போது அவர்கள் அசாம் மாநிலத்தில் தங்கி உள்ளனர்.
இதனால் சிவசேனா- என்சிபி- காங்கிரஸின் மகா விகாஸ் கூட்டணி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அடேங்கப்பா... மகாராஷ்டிர சட்டசபை இடைத்தேர்தலில் பாஜகவிற்கு பலத்த அடி கொடுத்த காங்கிரஸ்.. அமோக வெற்றி
மகாராஷ்டிரா
இதற்கிடையே நேற்று அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் சில எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் பல எம்எல்ஏக்கள் வரவில்லை. அப்போது திடீர் திருப்பமாக ஷிண்டே உடன் சென்றதாகக் கருதப்பட்ட சில எம்எல்ஏக்கள் மீண்டும் தாக்ரே பக்கம் வந்தனர்.
ஆதரவு
இருந்த போதிலும், சிவசேனாவுக்கு மொத்தம் 55 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அவர்களில் 42 பேர் தனக்கு ஆதரவாக உள்ளதாக ஷிண்டே தெரிவித்துள்ளார். கட்சித் தாவல் தடை சட்டத்தில் இருந்து தப்பிக்க, ஷிண்டேவுக்கு குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதாவது அவருக்குக் குறைந்தபட்சம் 37 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. இதற்கிடையே நேற்று மாலை, சிவசேனா எம்எல்ஏக்கள் இருவர் ஷிண்டே முகாமில் இணைந்ததாகக் கூறப்பட்டது.
குழப்பம்
முன்னதாக சிவசேனா சட்டசபை தலைவர் பதவியில் இருந்து ஷிண்டே நீக்கப்படுவதாக சிவசேனா தலைமை அறிவித்தது. இருப்பினும், நேற்றிரவு ஷிண்டே தான் சிவசேனா சட்டசபை தலைவர் பதவியில் தொடர்வதாக மகாராஷ்டிரா ஆளுநருக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் இருந்து கடிதம் எழுதப்பட்டது. இதனால் மகாராஷ்டிர அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது
கூட்டணி கட்சிகள் மவுனம்
மகா விகாஸில் உள்ள கூட்டணிக் கட்சிகள் இந்த விவகாரத்தில் இருந்து தள்ளியே இருக்கிறது. இது சிவசேனா கட்சியின் உள் விவகாரம் என்றும் இதை சிவசேனா தலைமை சுமுகமாகத் தீர்க்கும் என்றே என்சிபி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதேநேரம் இது மகா விகாஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக செய்துள்ள சதி என்றும் சாடி வருகின்றனர்.
உத்தவ் தாக்ரே
இந்தச் சூழலில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே, தான் ராஜினாமா செய்யத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார். ராஜினாமா கடிதம் தயாராக உள்ளதாகவும் அதிருப்தியாளர்களே வந்து அந்தக் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துவிடலாம் என்று கூறினார். மேலும், அத்துடன் நிற்காமல் முதல்வரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் இருந்தும் அவர் காலி செய்தார். அப்போது அங்குக் கூடிய சிவசேனா ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.
Recommended Video
நம்பர் கணக்கு
மொத்தம் 287 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 144 எம்எல்ஏக்கள் தேவை. சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 169 இடங்கள் இருந்தது. ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், மகா விகாஸ் கூட்டணி பெரும்பான்மையை இழக்கும் சூழல் ஏற்படும். இதனால் உத்தவ் தாக்கரே அரசே கவிழலாம். கட்சித் தாவல் தடைச் சட்டத்தைப் பயன்படுத்த உத்தவ் தாக்கரேவுக்கு குறைந்தது 37 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும்.