அடுத்த முதல்வர் யார்? ஏக்நாத் ஷிண்டே சொன்ன வார்த்தை! அமோக வெற்றிக்கு பிறகு பாஜக கூட்டணியில் சிக்கல்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பாஜக இடம்பெற்றுள்ள மகாயுதி கூட்டணி 230க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பதில் அளித்துள்ளார். இது கூட்டணிக்குள் விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.
288 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக 145 இடங்களிலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) 81 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 59 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

மகா விகாஸ் அகாதி கூட்டணியில், காங்கிரஸ் கட்சி 102 தொகுதிகளிலும், சிவசேனா (உத்தவ் தாக்கரே) 92 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 86 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜக - சிவசேனா (ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 231 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களிலும், மற்ற கட்சிகள் 9 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அதில் பாஜக 133 இடங்களிலும், ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 தொகுதிகளிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
மகாராஷ்டிரா வெற்றியை தொடர்ந்து, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிராவில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே முதலமைச்சராக உள்ள ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகத் தொடர்வாரா அல்லது பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் பாஜக சார்பில் முதல்வர் வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா பாஜக கூட்டணியில் குழப்பம்? "எனது தந்தை முதல்வராக தொடரணும்.." ஷிண்டே மகன் தடாலடி
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியை சேர்ந்த ஒருவர் தான் முதல்வராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதால் பாஜக சார்பில் முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் இருக்கலாம் என விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, “மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி. இது மாபெரும் வெற்றி. மஹாயுதிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று முன்பே கூறியிருந்தேன். சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மஹாயுதி கட்சிகளின் அனைத்துத் தொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஏக்நாத் ஷிண்டே, “இறுதி முடிவுகள் வரட்டும். நாங்கள் அனைவரும் ஒன்றாகத் தான் தேர்தலை சந்தித்தோம். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு, 3 கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து பேசி முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அடுத்த முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் பிரவின் தரேகர் இன்று கூறி இருந்த நிலையில், ஷிண்டே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதால், முதல்வர் பதவியை முன்வைத்து கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்படும் எனக் கணிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications