பேசுன வரை போதும்.. அசால்ட்டாக வான்கடே ஸ்டேடியத்தை புக் செய்த பாஜக.. அதிர்ச்சியில் சிவசேனா
மும்பை: மகாராஷ்டிராவில் யாருடைய அரசு அமையப்போகிறது, என்பது குறித்து அனைத்து தரப்பினரிடையேயும் குழப்பம் நிலவுகிறது. அதே நேரத்தில், சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை வென்ற பாஜக, அரசாங்கத்தை அமைப்பதில் நம்பிக்கையுடன் உள்ளது.
பதவியேற்பு விழாவிற்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தை பாஜக முன்பதிவு செய்துள்ளது. நவம்பர் 5 ஆம் தேதிக்கு பாஜக, இந்த கிரிக்கெட் மைதானத்தை முன்பதிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) அனுமதி கிடைத்த பின்னர், பாஜகவிற்கு வான்கடே ஸ்டேடியம், வாடகைக்கு, வழங்கப்பட வாய்ப்புள்ளது.

காவல்துறை
மும்பை காவல்துறை மற்றும் அதிகாரிகள் குழு வெள்ளிக்கிழமை வான்கடே மைதானத்தை பார்வையிட்டது இந்த தகவல்களை உறுதி செய்வதை போல அமைந்தது. முன்னதாக, பதவியேற்புக்காக மஹாலக்ஷ்மி ரேஸ்கோர்ஸ் தேர்வு செய்யப்பட்டது, ஆனால் மும்பை போலீஸ் அறிவுறுத்தலுக்கு பின்னர் அந்த இடத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது.

பாஜக உறுதி
பாஜக கூட்டணி கட்சியான, சிவசேனா மகாராஷ்டிராவில் 50-50 அதிகாரப் பங்கீடு சூத்திரத்தில் பிடிவாதமாக உள்ளது. அதே நேரத்தில், பாஜக சார்பிலான முதல்வர் வேட்பாளர் தேவேந்திர பட்னாவிஸ் தனது முடிவில் பின்வாங்கத் தயாராக இல்லை. முதல்வர் பதவியோடு, உள்துறை, நிதி உள்ளிட்ட பல முக்கியமான அமைச்சகங்களையும் தாங்களே வைத்திருப்போம் என பாஜக உறுதியாக கூறியுள்ளது.

தாமதம் நல்லதல்ல
சிவசேனா இளம் தலைவர் ஆதித்யா தாக்கரே வியாழக்கிழமை மாலை அளித்த பேட்டியொன்றில், அரசு அமைப்பதில் தாமதம் ஏற்படுவது நல்லதல்ல என்று எச்சரித்தார். மேலும், தனது கட்சி பாஜகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று கூறினார். எவ்வாறாயினும், அரசாங்கம் அமைப்பது குறித்து தனது தந்தையும், சிவ சேனா தலைவருமான உத்தவ் தாக்கரே இறுதி முடிவு எடுப்பார் என்று அவர் கூறினார்.

காங்கிரசிலும் சிக்கல்
மறுபுறம், சிவசேனாவை ஆதரிக்கும் பிரச்சினையில் காங்கிரஸ் பிளவுபட்டுள்ளது. சிவசேனாவை ஆதரிக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க விரும்பினர், ஆனால் அவர்களால் சந்திக்க முடியவில்லை. காங்கிரஸ் எதிர்க்கட்சியில் அமரும் என்றுதான் அதன் தலைவர்கள் இதுவரை சொல்லி வருகிறார்கள்.

சரத் பவாருடன் சந்திப்பு
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் சிவசேனாவைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என அந்த கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்தார். இவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பாஜகவுக்கு ஷாக்கும் கொடுத்துள்ளார். ஆனால் தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமருவது சாத்தியம் இல்லை என மகாராஷ்டிரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுயேச்சைகள் ஆதரவா?
கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கும்போது போதிய பெரும்பான்மை பலம் இல்லாமல் பாஜக ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக 122 தொகுதிகளை வென்றுள்ளது. ஆட்சியமைக்க குறைந்தபட்சம், 145 எம்எல்ஏக்கள் பலம் தேவை. எனவே, சுயேச்சைகள் மற்றும் பிற கட்சியில் யாராவது ஆதரவு அளிக்க வாய்ப்பு இருந்தால் அதை பாஜக பயன்படுத்தப்போகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications